
<p>தமிழ்நாட்டில் திமுகவிற்கு காங்கிரஸுக்கும் பிளவு ஏற்பட்ட நிலையில், தற்போது தேசிய அளவில், ராகுலுக்கு எதிராக மூன்றாம் அணி ஒன்றை உருவாக்க ஸ்டாலின் திட்டம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, திமுகவின் துணை பொதுச் செயலாளராக உள்ள கனிமொழி, சில முக்கிய தலைவர்களை சந்தித்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.</p>
<h2>தமிழ்நாட்டில் திமுகவை கழற்றிவிட்ட காங்கிரஸ்</h2>
<p>தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில், கடந்த முறை ஆட்சிக் கட்டிலில் இருந்த திமுக 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. தனிப்பெரும் கட்சியாக <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> உருவெடுத்த நிலையில், அக்கட்சி ஆட்சி அமைக்க கூடுதல் எம்எல்ஏ-க்கள் தேவைப்பட்ட நிலையில், உடனடியாக ஆதரவு தெரிவித்து, திமுகவை விட்டு விலகிச் சென்றது காங்கிரஸ். இதையடுத்து, காங்கிரஸ் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. அக்கட்சி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக திமுகவினர் வசைபாடி வருகின்றனர்.</p>
<h2>தேசிய அளவில் மூன்றாம் அணி</h2>
<p>சகோதரர் போல் பாவித்த ராகுல் கொஞ்சம் கூட யோசிக்காமல் சட்டென்று கழற்றிவிட்டு சென்றதால் அப்செட்டில் இருந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தற்போது ஒரு மாஸ்டர் பிளானை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆம், அதுதான் தேசிய அளவில், பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாம் அணி ஒன்றை உருவாக்குவது.</p>
<p>அதற்காக, பிராந்திய கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாம் திமுக. அதற்காக, இண்டி கூட்டணியில் இருந்தாலும், காங்கிரஸுடன் முரண்பாடு கொண்டுள்ள கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதற்கு கனிமொழி மூலமாக அச்சாரம் போட்டுள்ளாராம் மு.க. <a title="ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/mk-stalin" data-type="interlinkingkeywords">ஸ்டாலின்</a>.</p>
<h2>உத்தவ் தாக்கரேவை சந்தித்த கனிமொழி</h2>
<p>இந்த மூன்றாம் அணிக்கான முயற்சியின் ஒரு பகுதியாக, மும்பையில் சிவசேனா (உத்தவ்) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவை நேற்று நேரில் சந்தித்து பேசியுள்ளார் கனிமொழி. அப்போது, சஞ்சய் ராவத்தும் உடனிருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சந்திப்பு, தொகுதி மறுவரை தொடர்பானது என கூறப்பட்டாலும், உண்மையில் மூன்றாம் அணி அமைப்பது தொடர்பாகவே இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.</p>
<h2>டிம்பிள் யாதவ், சுப்ரியா சுலேவையும் சந்திக்க திட்டம்</h2>
<p>இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக, உத்தரப் பிரதேசத்தில், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த எம்பி டிம்பிள் யாதவை கனிமொழி சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில், பாஜகவை எதிர்க்க அகிலேஷ் யாதவ் வகுத்துள்ள ‘பிடிஏ‘ வியூகத்திற்கு, டிம்பிள் யாதவையே அவர் முன்னிலைப்படுத்தி வருகிறார். ஏனென்றால், பெண் வாக்காளர்கள் சரிசமமாக உள்ள அம்மாநிலத்தில், அவர்களை கவர்ந்தவராக டிம்பிள் யாதவ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>இதேபோல், மகாராஷ்டிராவில், முக்கிய அரசியல் ஆளுமையாக மாறியுள்ள சரத்பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், எம்பியுமான சுப்ரியா சுலேவையும் கனிமொழி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>
<p>2029 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது, திமுக பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிக்கப் போகிறது என்பது கேள்விக்குறியே ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில், தவெக கூட்டணி ராகுல் காந்தியையும், அதிமுக பாஜக கூட்டணி நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்தியும் வாக்கு கேட்கும் நிலையில், திமுக என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்த நிலையில், தற்போது மோடி மற்றும் ராகுலை தவிர்த்து, மூன்றாவதாக ஒரு தலைவரை முன்னிலைப்படுத்த திமுக பிளான் போடுவதாக கூறப்படுகிறது</p>
<p>இப்படி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிரான மனநிலை கொண்ட கட்சிகளை ஒருங்கிணைத்து, தேசிய அளவில் ஒரு மூன்றாம் அணியை உருவாக்கும் திமுக தலைவர் ஸ்டாலினின் மூன்றாம் அணி கனவு பலிக்குமா.? பொறுத்திருந்து பார்ப்போம்.</p>
<p> </p>
<p> </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/know-whether-soy-be-consumed-or-not-during-a-weight-loss-journey-274406" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article