
<p style="text-align: justify;"><strong>Kanchipuram Drinking Water Crisis:</strong> காஞ்சிபுரம் மாநகராட்சியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், பாலாற்றில் இருந்து கூடுதல் நீரை எடுத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கான முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக திருப்பாற்கடல் பகுதியில் புதிய கிணறுகள் அமைத்து தண்ணீர் உறிஞ்சுவதற்கு தேவையான அனுமதி தற்போது பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகர மக்களின் நீண்டகால குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான பணிகள் மேலும் வேகமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<h3 style="text-align: justify;">2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு குடிநீர் தேவை</h3>
<p style="text-align: justify;">காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இங்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மாநகராட்சியின் குடிநீர் இணைப்புகளின் எண்ணிக்கை 32,687 ஆக உள்ளது. திருப்பாற்கடல் மற்றும் ஓரிக்கை பாலாறு குடிநீர் திட்டங்கள் மூலம் தற்போது பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.</p>
<p style="text-align: justify;">மாநகரப் பகுதியில் ஒரு நபருக்கு நாளொன்றுக்கு சுமார் 135 லிட்டர் குடிநீர் தேவைப்படும் நிலையில், தற்போதைய நிலையில் ஒரு நபருக்கு சராசரியாக 89 லிட்டர் மட்டுமே வழங்க முடிகிறது. இதனால் தேவைக்கும், கிடைக்கும் குடிநீருக்கும் இடையே கணிசமான பற்றாக்குறை நிலவி வருகிறது. குறிப்பாக சில பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.</p>
<h3 style="text-align: justify;">லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்</h3>
<p style="text-align: justify;">குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் தேவையை சமாளிக்க குடிநீர் லாரிகள் மூலமாகவும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், மக்கள்தொகை அதிகரிப்பு மற்றும் குடிநீர் தேவையின் தொடர்ச்சியான உயர்வு காரணமாக, லாரிகள் மூலம் மட்டும் தட்டுப்பாட்டை நிரந்தரமாக சமாளிப்பது சாத்தியமில்லாத நிலை உள்ளது. இதனால் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு கூடுதல் குடிநீர் ஆதாரத்தை உருவாக்கி, முறையான கட்டமைப்பின் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்கும் வகையில் விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.</p>
<h3 style="text-align: justify;">ரூ.331.88 கோடியில் குடிநீர் விரிவாக்கத் திட்டம்</h3>
<p style="text-align: justify;">காஞ்சிபுரம் மாநகராட்சியின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில், ‘தமிழக காலநிலை தாங்கு திறன் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்’ கீழ் ரூ.331.88 கோடி மதிப்பில் குடிநீர் விரிவாக்கப் பணிகள் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன.</p>
<p style="text-align: justify;">இந்தத் திட்டத்தின் முக்கிய பகுதியாக திருப்பாற்கடல் பகுதியில் இருந்து கூடுதல் குடிநீரை எடுத்து, சேமித்து, மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்வதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக திருப்பாற்கடல் பகுதியில் மூன்று புதிய கிணறுகள் அமைத்து தண்ணீரை உறிஞ்ச வேண்டியிருந்தது.</p>
<h3 style="text-align: justify;">அனுமதி கிடைத்தது</h3>
<p style="text-align: justify;">திருப்பாற்கடல் பகுதியில் கிணறுகள் அமைத்து பாலாற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு நீர்வளத்துறை முறையான அனுமதி தேவைப்பட்ட நிலையில், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உதவியுடன் தேவையான அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திட்டத்தின் முக்கியமான கட்டுமானப் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான வழி ஏற்பட்டுள்ளது. புதிய நீர் ஆதாரம் பயன்பாட்டுக்கு வரும் நிலையில், தற்போதைய குடிநீர் பற்றாக்குறையை கணிசமாக குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<h3 style="text-align: justify;">24 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் விநியோகம்</h3>
<p style="text-align: justify;">திட்டத்தின் கீழ் திருப்பாற்கடல் பகுதியில் உறிஞ்சப்படும் தண்ணீர் 12 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் முதலில் சேமிக்கப்பட உள்ளது. பின்னர் சாய் தள அமைப்பு மூலம் அந்த நீர் வேகவதி ஆற்றில் கட்டப்பட்டு வரும் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் சேமிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும்.</p>
<p style="text-align: justify;">அங்கிருந்து காஞ்சிபுரம் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக புதிதாக 14 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 10 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளையும் சேர்த்து மொத்தம் 24 தொட்டிகள் மூலம் குடிநீர் நீரேற்றம் செய்யப்பட உள்ளது.</p>
<h3 style="text-align: justify;">தடையின்றி குடிநீர் கிடைக்குமா?</h3>
<p style="text-align: justify;">புதிய கிணறுகள், சேமிப்பு நிலையங்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்த பிறகு, காஞ்சிபுரம் மாநகராட்சியின் குடிநீர் விநியோக திறன் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் நிலவும் சிக்கலைக் குறைத்து, மக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்கான வாய்ப்பு உருவாகும்.</p>
<p style="text-align: justify;">ரூ.331.88 கோடி மதிப்பிலான இந்த விரிவாக்கத் திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது, காஞ்சிபுரம் மாநகராட்சியின் குடிநீர் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும். பாலாற்றில் இருந்து கூடுதல் நீரைப் பெற்று, அதை முறையாகச் சேமித்து 24 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் வழியாக விநியோகிக்கும் திட்டம், மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
Source: Read Full Article