
<p style="text-align: justify;">தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அரசியல் கிங் மேக்கர் என்று அழைக்கப்படுபவருமான பெருந்தலைவர் காமராஜர் மறைந்தபோது, காங்கிரஸ் கட்சி சார்பில் அவரது உடலை அடக்கம் செய்ய சென்னை மெரினாவில் இடம் கேட்டதாகவும், அப்போது அந்த இடத்தில் அடக்கம் செய்ய அன்றைய முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி மறுத்துவிட்டதாகவும் சட்டப்பேரவையில் குற்றஞ்சாட்டியிருந்தார் காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் தாரகை கத்பர்ட். இதற்கு பேரவையிலேயே முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து, அது தவறு என கூறிவிட்டார்.</p>
<p style="text-align: justify;">இந்நிலையில், காமராஜர் இறந்தபோது என்ன நடந்தது என்பதை காமராஜருடனே பயணித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த கே.ராஜாராம் நாயுடு பேசியிருக்கிறார். அது 1975 அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற சட்டப்பேரவையிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வரலாறு எதுவும் தெரியாமல் திமுக மீதும் கலைஞர் கருணாநிதி மீதும் கண்மூடித்தனமாக பழிப்போட முயற்சித்திருக்கிறார் தாரகை கத்பர்ட் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.</p>
<p style="text-align: justify;"><strong><em>காமராஜர் இறந்தபோது கலைஞர் செய்தது என்ன ?</em></strong></p>
<p style="text-align: justify;">சட்டப்பேரவையில் நடைபெற்ற காமராஜருக்கான இரங்கல் தீர்மானத்தில் பேசிய ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவரும் காமராஜரின் நெருங்கிய நண்பருமான கே.ராஜாராம் நாயுடு, ’பெருந்தலைவர் காமராசர் அவர்கள் சாதாரண தொண்டராக இருந்த காலத்திலிருந்தே எனக்கும் அவருக்கு நட்பு உண்டு. அவரும் நானும் பல கிராமங்களுக்கு கால்நடையாகவே சென்று பேசியிருக்கிறோம்’ என்று தொடங்கி, அவரது மறைவு நாளில் என்ன நடந்தது என்பதையும் சட்டப்பேரவையிலேயே விவரித்திருக்கிறார்.<br /><br />அக்டோபர் 2ஆம் தேதி இரவில், பெருந்தலைவர் காமராசர் மறைந்த அன்று, நமது மாநில அரசை நடத்தும் முதலமைச்சர் கலைஞர் அவர்களும், கல்வி அமைச்சரும், மற்ற அமைச்சர்களும் உடனே அவரது வீட்டுக்கு சென்றனர். தங்களின் சகோதரர்களில் ஒருவர் இறந்துவிட்டதைப் போல அந்த இடத்தில் அவர்கள் இருந்தார்கள். ‘மற்றொரு கட்சித் தலைவர் இறந்துவிட்டார்’ என்று அவர்கள் நினைத்தாக தெரியவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.</p>
<p style="text-align: justify;"><strong><em>கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்</em></strong></p>
<p style="text-align: justify;">அதோடு, முதலமைச்சர் கலைஞர் எங்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டு துக்கம் தாளாது கதறி அழுதார். என்னுடைய உயிர் உள்ளவரை இது மறக்க முடியாதது. அவ்வளவு பாச உணர்ச்சியை அவர் காட்டினார். காமராசர் அவர்களிட்சம் இருந்து எப்படி இந்த பாச உணர்ச்சியை கலைஞர் பெற்றார் என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் காமராஜருடைய உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, அங்கேயே எரித்து, நினைவுச் சின்னம் கட்டுவது என்றுதான் முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், காமராஜரின் உடலை ராஜாஜி ஹாலுக்கு கொண்டுபோய் வைக்க வேண்டும். முதல்வர் கலைஞரிடம் அனுமதி கேளுங்கள் என்று சிலர் சொன்னார்கள். எப்படி அனுமதி கேட்பது என்று யோசித்த விநாடியே முதலமைச்சர் கலைஞர் அவர்கள் காமராசர் வீட்டுக்கே வந்துவிட்டார்.</p>
<p style="text-align: justify;"><strong>காமராசர் உடலை ராஜாஜி மண்டபத்திற்கு கொண்டுச் சென்ற கலைஞர்</strong> <br /><br />இங்கே கூட்டத்தை சமாளிக்க முடியாது. உடனே ஐயாவின் உடலை ராஜாஜி ஹாலுக்கு கொண்டுச் செல்லவேண்டும் என்று சொன்னார். நாங்கள் கனவு கண்டதை போல அது இருந்தது. நாங்கள் எதிர்பார்த்ததை போல முதல்வர் கலைஞர் சொன்னார். எங்கள் மனதில் உள்ளதை எப்படி அவர் கண்டறிந்து சொன்னார் என்று இன்று வரை எனக்கு தெரியவில்லை. எனக்கும் என்னுடைய சகாக்களுக்கும் என்ன கைம்மாறு செய்வது என்றே அப்போது புரியவில்லை.</p>
<p style="text-align: justify;"><strong><em>காமராஜர் உடலை எங்கே எரிப்பது என்று ஆலோசித்தோம்<br /></em></strong><br />காமராசரின் உடல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டுவந்து பொதுமக்கள் வந்து செல்ல ஏற்பாடு செய்துவிட்டு, தலைவர்கள் அமர மேடை அமைத்துக்கொண்டிருந்த நேரத்தில், மந்திரி ச்சபை இங்கேதான் கூடுகிறதோ? என்கிற வகையில் எல்லா அமைச்சர்களும் அங்கே வந்துவிட்டார்கள். காமராசர் உடலை எங்கு வைத்து எரிப்பது ? அடுத்தடுத்த காரியங்கள் என்ன ? நாங்கள் எல்லாம் கூடி ஆலோசனை செய்துகொண்டிருந்தோம். ‘கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்திற்குப் பக்கத்தில் எரிக்க வேண்டும்’ என்று முதல்வர் கலைஞர் அவர்களே சொன்னார்.</p>
<p style="text-align: justify;"><strong><em>மழை இரவில் எங்களை அழைத்துக்கொண்டு கிண்டி சென்றார் கலைஞர்</em></strong><br />அன்று இரவு எட்டு மணிக்கு கனமழை பெய்துகொண்டிருந்தது. அப்போது முதலமைச்சர் கலைஞரும், பொதுப்பணித்துறை அமைச்சரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் காரியதரிசியையும் என்னையும் அழைத்துக்கொண்டு கிண்டி காந்தி மண்டபம் சென்றனர். வெளிச்சம் இல்லாத அந்த இடத்தில், நாங்கள் சென்ற கார்களை திருப்பி நிறுத்தி அதன் விளக்கு வெளிச்சத்தில் இடத்தை தேர்வு செய்தார் கலைஞர். இதை அதிகாரிகளே செய்யலாம். ஆனால், முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எங்களை அழைத்துக்கொண்டு அப்படி மழை பெய்கிற இரவில் நேரடி பார்வையிலேயே காமராசருக்காக இதையெல்லாம் செய்தார்’ என்று பேசி பதிவு செய்திருக்கிறார் ராஜாராம் நாயுடு.</p>
<p style="text-align: justify;"><strong><em>கிண்டியில் இறுதிசடங்கு நடத்தச் சொன்ன கலைஞர்</em></strong></p>
<p style="text-align: justify;">அவருடைய முழு உரையிலுமே மெரினாவில் உள்ள இடத்தில் காமராஜரை அடக்கம் செய்ய இடம் கேட்கலாமா என்று நாங்கள் ஆலோசித்தோம் என்று ஒருவார்த்தைக் கூட அவர் கூறவில்லை. அதோடு, காமராஜர் உடலை அடக்கம் செய்வதற்கு பதில் அவர்களின் பழக்க வழக்கங்கள் அடிப்படையில் அவரது சிதையை எரியூட்டுவது தொடர்பாகவே ஆலோசிக்கப்பட்டதாக ராஜாராம் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இதன்மூலம் காமராசர் இறந்தபோது, காங்கிரஸ் கட்சி, அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய முதல்வர் கலைஞரிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லையென்பதும், காமராஜர் இறந்தபோது அனைத்து இறுதிசடங்குகளையும் பூரண அரசு மரியாதையுடன் முன் நின்று நடத்தியவர் கலைஞர் கருணாநிதி என்பதும் தெளிவாகியுள்ளது</p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;">முரசொலியில் வெளியான கட்டுரையிலிருந்து</p>
Source: Read Full Article