
<p>எங்களுக்கு போட்ட வாக்கு பிச்சையை கூட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் போடவில்லை என துரை வைகோ கடுமையாக சாடியுள்ளார். </p>
<p>மிசா காலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறை சென்றதாக சொல்லப்படும் விவகாரம் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அவர் எதற்காக சிறை சென்றார் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் கேள்வியெழுப்ப இதற்கு திமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. அதேசமயம தவெக கூட்டணியில் உள்ள மதிமுகவின் எம்பி துரை வைகோ பேசும்போது, மிசாவின்போது <a title="ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/mk-stalin" data-type="interlinkingkeywords">ஸ்டாலின்</a> கைதானது உண்மை. ஆனால் முழுமையான அரசியல் காரணத்துக்காக அல்ல என சொல்ல பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் திமுகவினர் கடந்த இரண்டு நாட்களாக துரை வைகோவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.</p>
<p><iframe title="MK Stalin Plan Against Rahul | ராகுலுக்கு எதிராக 3-ம் அணி ஸ்டாலின் மாஸ்டர் பிளான் தூதுபோன கனிமொழி!" src="https://www.youtube.com/embed/SxiS72ImgJs" width="1101" height="619" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி எனக்கு திமுக போட்ட பிச்சை என திரும்பி திரும்பி சொல்லி வருகின்றனர். திமுக தொண்டர்கள் மேல் எனக்கு மரியாதை இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுக தலைவர்களில் நான் மதிக்கும் பல பேர் இருக்கிறார்கள். இந்த கட்சிக்காக உழைத்து தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த தொண்டர்கள், மூத்த நிர்வாகிகள் இருக்கிறார்கள். அவர்களும் மதிமுக தலைவர் வைகோ மேல் மரியாதை வைத்துள்ளார்கள். ஆனால் தேர்தல் என வந்து விட்டாலே கூட்டணி கட்சிகளின் உழைப்பு மட்டுமல்லாமல் மக்களின் ஆதரவோடு நாம் வெற்றி பெறுகிறோம். </p>
<p>யார் போடும் பிச்சையில் கிடையாது. இவர்கள் என்ன மன்னர்களா இல்லை சக்கரவர்த்திகளா?.. இப்படியெல்லாம் பிச்சை என பேசுகிறார்கள். கிட்டதட்ட 20,30 இயக்கங்கள் சேர்ந்து எல்லாரும் தேர்தலில் உழைத்தார்கள். திமுக தொண்டர்களின் பங்களிப்பு முதன்மையானதாக இருந்தது. மக்களிடம் சென்று கேட்டு அவர்கள் அளித்த வாக்குகளால் தான் வெற்றி பெறுகிறோமே தவிர திமுக போட்ட பிச்சையினால் அல்ல. அது ஒரு காலத்திலும் கிடையாது. </p>
<p>இனி வரும் தேர்தல்களில் திமுக நிற்கப்போகும் நிலையில் இது யார் போடும் பிச்சை என தெரிந்து விடும். மக்கள் தான் எஜமானர்கள். திமுக போடும் பிச்சை என சொல்வது தவறான கருத்தாகும். இதுதான் ஜனநாயகத்துக்கும், சமூகத்துக்கும் எதிரானது. அதாவது பண்ணையார் அரசியல் கூடாது என சொல்லி விட்டு தான் 1967ம் ஆண்டு அண்ணா மாற்றம் கொண்டு வந்து எளிய பின்னணி கொண்டவர்கள் எம்.எல்.ஏ., எம்.பி.,யாக மாறினார்கள். அண்ணா கொண்டு வந்த மறுமலர்ச்சி இன்று திராவிட இயக்கங்களில் பண்ணையார் அரசியலை கொண்டு வந்து விட்டது. எம்.எல்.ஏ.. எம்.பி., தேர்தலாக இருந்தால் எவ்வளவு முதலீடு போடுவீர்கள் என கேட்கிறார்கள். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளியை <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> தலைவர் முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> வைத்தார். இன்று லஞ்சம், ஊழல் இல்லாத அரசியலை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதனால் இந்த பிச்சை என்றெல்லாம் பேச வேண்டாம். அந்த வார்த்தையே வைத்துக் கொள்வோம். திமுக கூட்டணியினர் உள்ளிட்ட பலர் கேட்டு மக்கள் பிச்சை போட்டு எங்களை ஜெயிக்க வைத்தார்கள். ஆனால் கொளத்தூரில் மக்கள் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அந்த பிச்சையைக் கூட போடவில்லை. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/can-these-problems-be-stopped-with-pineapples-274220" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article