
<p><strong>DMK Protest Against CM Vijay:</strong> மக்களை ஏமாற்றி குதிரை பேரம் நடத்தி விஜய் முதலமைச்சராகி இருப்பதாக, திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.</p>
<h2><strong>CM விஜயை கடுமையாக விமர்சித்த திமுக</strong></h2>
<p>முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவரான ஸ்டாலின் மிசா காலகட்டத்தில் கைதானது தொடர்பாக, முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடபாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், <strong>“</strong>திரையுலக மோகம், கவர்ச்சி மூலமாக மக்களை மயக்கி, போலியான பிம்பத்தை சமூக ஊடகங்களின் மூலமாகக் கட்டமைத்து, குழந்தைகளை ஏமாற்றி குடும்பத்துக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி, போலி வாக்குறுதிகள் அளித்து ஆட்சியைக் கைப்பற்றி, அதுவும் ஆட்சி அமைக்கும் வலிமையைப் பெறமுடியாத மைனாரிட்டி நிலைமை என்பதால், தி.மு.க. கூட்டணியில் வென்றவர்களுக்கு அமைச்சர்கள் பொறுப்புகளைக் கொடுத்து அவர்களது ஆதரவைப் பெற்று, அதிமுக சார்பில் வென்றவர்களுக்கும் அமைச்சர் பதவி தருவதாக ஏமாற்றி குதிரை பேரம் நடத்தி, முதலமைச்சராகியிருக்கிறார் நடிகர் விஜய்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/vulvar-cancer-risk-factors-in-women-symptoms-causes-prevention-details-in-pics-273998" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<h2><strong>”மக்களை ஏமாற்றும் விஜய்”</strong></h2>
<p>இப்பொறுப்புக்கு வந்த பிறகு பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாரா? என்றால் இல்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒரு சில வாக்குறுதிகளை அரைகுறையாகச் செய்து ஏமாற்றி வருகிறார். திராவிட மாடல் ஆட்சி மூலமாக கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறுத்தினார். நிறுத்த முடியாத திட்டங்களுக்கு பெயரை மாற்றி, ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைச் சிறப்பாகச் செய்து வருகிறார்.</p>
<p>கொலை - கொள்ளை அதிகமாகிவிட்டது. போதை பொருள் நடமாட்டமும் - பாலியல் வன்முறையும் அதிகமாகிவிட்டது. பல்வேறு குற்றச்செயல்களில் த.வெ.க. நிர்வாகிகளே சிக்கி வருகிறார்கள். அதற்கு எந்த நடவடிக்கை எடுக்காமல், அவர்களை பாதுகாக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள். 'தெரியாமல் ஓட்டுப் போட்டுவிட்டோம்' என்று மக்கள் வருந்திச் சொல்லி வருகிறார்கள். இதில் இருந்து திசை திருப்புவதற்காக தனது டயலாக் சூட்டிங் மேடையாக தமிழ்நாடு சட்டமன்றத்தை முதலமைச்சர் மாற்றி விட்டார்.</p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/cKkmMScGPZw?si=b74M3BmegTD-FvlA" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2><strong>”ஸ்டாலினை கொச்சைப்படுத்திய விஜய்”</strong></h2>
<p>திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஐந்து முறை இந்த நாட்டை ஆண்ட முதலமைச்சர் தலைவர் கலைஞரையும் - இந்தியாவின் புகழை தோகா மாநாட்டில் நிலைநாட்டிய பொருளாதார மேதை முரசொலி மாறனையும், திருமணம் ஆன ஐந்தே மாதத்தில், 23 வயதில் MISA (Maintenance of Internal Security Act) அவசரநிலைச் சட்டத்தில் கைதாக்கப்பட்டு சிறைச்சாலை சித்திரவதைகளை அனுபவித்து, ஓராண்டு காலம் சிறையில் இருந்த தியாகத்தைச் செய்த தலைவர் மு.க.<a title="ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/mk-stalin" data-type="interlinkingkeywords">ஸ்டாலின்</a> தியாகத்தை கொச்சைப்படுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் விஜய் பேசிய பேச்சு கடுமையான கண்டனத்துக்குரியது. அரசியல் உலகில் இத்தகைய அருவெறுப்பான உரையை சட்டமன்றம் கண்டிருக்காது.</p>
<h2><strong>”தந்திர மேடையான சட்டமன்றம்”</strong></h2>
<p>அவரது உரை மூலமாக சட்டமன்றத்தின் மாண்பு – மரபு - வரலாறு இவை அனைத்தும் காற்றில் பறக்கிறது. படங்களாக அந்த அவையில் நிற்கிறவர்கள் தலைகவிழ்ந்து கண்ணீர் வடித்திருப்பார்கள். சில அமைச்சர்கள் சட்டமன்றத்தில் தான் பேசுவது தவறு என்று தெரிந்தே பேசி, 'மீம்ஸ்', 'ரீல்ஸ்'-ஐ வெளியிடுகிறார்கள். நேரலை மூலமாக மக்களை சென்றடைந்த பிறகு அதை ஒப்புக்கு அவைக்குறிப்பில் இருந்து நீக்கிக் கொள்கிறார்கள். இப்படியாக தந்திர மேடையாக சட்டசபையை த.வெ.க. அரசு பயன்படுத்துகிறது.</p>
<p><a title="Dharapuram: தாராபுரம் தொகுதி எப்படி? சாதக, பாதகம், வாக்காளர்கள் விவரம்? இடைத்தேர்தலில் யார் கொடி பறக்கும்?" href="https://tamil.abplive.com/news/politics/dharapuram-by-election-2026-voters-analysis-key-issues-sathyabama-tvk-dmk-aiadmk-who-will-win-273982" target="_self">இதையும் படியுங்கள்: Dharapuram: தாராபுரம் தொகுதி எப்படி? சாதக, பாதகம், வாக்காளர்கள் விவரம்? இடைத்தேர்தலில் யார் கொடி பறக்கும்?</a></p>
<h2><strong>திமுக கண்டன ஆர்பாட்டம்</strong></h2>
<p>ஆட்சியின் தோல்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பித்துக் கொள்ள, கொச்சையான பேச்சுகளைப் பேசும் தரமற்ற மனிதராக முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> மாறியிருக்கிறார். இவரது இப்பேச்சைக் கண்டிக்கும் வகையில், தி.முக.. சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் வருகிற 12.09.2026 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்” என திமுக அறிவித்துள்ளது.</p>
Source: Read Full Article