
<p>தமிழ்நாடு முதல்வர் விஜய் படத்துடன் டீப் ஃபேக் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிவரும் நிலையில், அதை உருவாக்கியவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள சிபிசிஐடி போலீசார், இது போன்ற மோசடிகளில் இருந்து பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<h2>சிபிசிஐடி போலீசாரின் அறிக்கை</h2>
<p>இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக சிபிசிஐடி போலீசார், பேஸ்புக் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக முதல்வர் விஜய் பேசுவது போன்று ஏஐ வாயிலாக உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று பரவி வருவதாகவும், பண உதவி தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளும்படி வாட்ஸ்அப் எண் ஒன்றை கொடுத்து, அதில் தொடர்புகொள்ளுமாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.</p>
<p>சைபர் குற்றங்கள் தொடர்பான சிபிசிஐடி போலீசாரின் கண்ணிப்பின்போது, இந்தி மொழியில் உள்ள அந்த வீடியோ சைபர் குற்றப்பிரிவு போலீசாரின் கவனத்திற்கு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 1-ம் தேதி அது குறித்து வழக்குப்பதிவு செய்து, அந்த வீடியோவை உருவாக்கிய போலி ஐடி குறித்த தகவல்களை அளிக்கும்படி மெட்டா நிறுவனத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, அந்த வீடியோவை அகற்றும்படியும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p>
<p>விஜய் தோற்றத்தில் உருவாக்கப்பட்ட இதுபோன்ற பல ஏஐ வீடியோக்கள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பரப்பப்பட்டு வருவதாகவும், இந்த வீடியோக்கள் பாகிஸ்தானில் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>மேலும், அந்த வீடியோவை உருவாக்கிய குற்றவாளிகளை விரைவில் கைது செய்து, போலி வீடியோக்களை அகற்றவும் சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<h2>பொதுமக்களுக்கு எச்சரிக்கை</h2>
<p>தொடர்ந்து, இது போன்ற மோசடி வீடியோக்களில் குறிப்பிடப்படும் தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்புகொள்ள வேண்டாம் என்றும், அதில் குறிப்பிடப்படும் வாட்ஸ்அப் குழுக்களில் இணையவோ, அவற்றின் வாயிலாக அறிவுறுத்தப்படும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டாம் எனவும் சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p>ஏஐ தொழில்நுட்பம் வாயிலாக உருவாக்கப்படும் டீப் ஃபேக் வீடியோக்களில், முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> போன்று ஆள்மாறாட்டம் செய்து வெளியிடப்படும் போலியான பதிவுகள் குறித்து, பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதுடன், இணையதள மோசடிகளில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவம் சிபிசிஐடி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p>
<p>மேலும், இத்தகவலை, பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், சுற்றத்தாரிடம் எடுத்துரைத்து, போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.</p>
<p> </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/do-you-know-which-people-should-not-consume-raw-garlic-273193" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article