
<p style="text-align: justify;">தோஷம் கழிப்பதாகக் கூறி கனடா பெண் குடியுரிமை பெற்ற இலங்கைப் பெண்ணை நிர்வாணப் பூஜை செய்ய வைத்து, அதை வீடியோ கால் மூலம் பார்த்ததுடன், புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டிப் பணம் பறித்த கிளி ஜோசியரை மாம்பலம் மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.</p>
<h3 style="text-align: justify;">ஜோசியரின் ரகசிய பூஜை</h3>
<p style="text-align: justify;">இலங்கையைச் சேர்ந்த 37 வயது பெண் கனடா குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்த அப்பெண், சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்து தனியார் தொலைக்காட்சியின் பாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் அறை எடுத்து தங்கியிருந்த அவர், மாலையில் மெரினா கடற்கரைக்குச் செல்வது வழக்கம். அப்போது, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (48) என்பவரிடம் கிளி ஜோசியம் பார்த்துள்ளார். அப்பெண்ணின் கடந்த கால வாழ்க்கையை இசக்கிமுத்து சரியாகக் கூறியதால், அவர் மீது பெண்ணுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.</p>
<h3 style="text-align: justify;">நிர்வாணப் பூஜையும் லட்சக்கணக்கில் மிரட்டலும்</h3>
<p style="text-align: justify;">இதைப் பயன்படுத்திக் கொண்ட இசக்கிமுத்து, "தொலைக்காட்சியில் நீ மிளிர வேண்டுமென்றால் உன் மீதான தோஷத்தைக் கழிக்க வேண்டும்; அதற்கு நிர்வாணப் பூஜை செய்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்" என ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை நம்பிய அப்பெண், தான் தங்கியிருந்த அறையிலிருந்தவாறே நிர்வாணப் பூஜை செய்ய, இசக்கிமுத்து அதை வீடியோ கால் மூலம் பார்த்துள்ளார். பரிகாரச் செலவிற்காகப் பல தவணைகளாக அப்பெண்ணிடம் இருந்து சுமார் 70 ஆயிரம் ரூபாய் வரை அவர் பெற்றுள்ளார்.</p>
<h3 style="text-align: justify;">காவல் துறை நடவடிக்கை மற்றும் கைது</h3>
<p style="text-align: justify;">இதன்பின் கனடா சென்ற அப்பெண் மீண்டும் சென்னை வந்தபோது, மீண்டும் பூஜை செய்ய நிர்வாணப் படங்களை அனுப்புமாறு இசக்கிமுத்து கேட்டுள்ளார். அப்பெண் அனுப்பியதும், அந்தப் படங்களை வைத்து, "உன் நிர்வாணப் படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்; நான் தங்கியிருக்கும் அறைக்கு நீ வர வேண்டும், மேலும் ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும்" என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் மாம்பலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, வழக்குப் பதிந்த காவல்துறையினர் தென்காசி சென்று இசக்கிமுத்துவைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
Source: Read Full Article