
<h2><strong>சொத்து தகராறு - நீதிமன்றத்தில் வழக்கு</strong></h2>
<p>புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் அமைச்சர் மறைந்த வெங்கடாஜலம். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு ராஜபாண்டி ( வயது 42 ) என்ற மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இரண்டாவது மனைவிக்கு ராஜராஜன் ( வயது 38 ) உள்ளிட்ட இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜபாண்டி அதிமுக அம்மா பேரவை மாநில இணை செயலாளராக உள்ளார். அவரது சகோதரரான ராஜராஜனோடு சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.</p>
<p>இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு வடகாடு பகுதியில் உள்ள ராஜபாண்டியன் வீட்டிற்கு அருகே உள்ள ஓட்டு வீட்டை, ராஜராஜனுக்கு பிரித்து கொடுத்ததாகவும், ஆனால் அங்கு அவரை இருக்க விடாமல் குடும்பத்தினரை வெளியே தள்ளி வீட்டை ராஜபாண்டி பூட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.</p>
<p>இதனால் ராஜராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் குழந்தைகளோடு வீடு இல்லாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர், இது குறித்து காவல் நிலையம், புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனுக் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ராஜராஜனின் மனைவி அவரது தாயார் வீட்டுக்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.</p>
<h2><strong>" என்னுடைய வீட்டில் என்ன செய்கிறாய்"</strong></h2>
<p>இந்நிலையில் இந்த சொத்துப் பிரச்சனை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் ராஜராஜனுக்கு வழங்கிய வீட்டை அவரிடம் ஒப்படைக்க உத்தர விட்டது. இதை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜபாண்டியிடமிருந்து சாவியை வாங்கி காவல் துறையினர் ராஜராஜனிடம் ஒப்படைத்துள்ளனர்.</p>
<p>இந்நிலையில் சாவியை வாங்கிய ராஜராஜன் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது ராஜபாண்டி தனது வீட்டில் என்ன செய்கிறாய் என்று கேள்வி எழுப்பி ராஜராஜனை கத்தியை வைத்து குத்த முயன்றுள்ளார். அவரிடமிருந்து தப்பி ஓடியவரை விரட்டி சென்றுள்ளார்.</p>
<p>ராஜராஜன் அந்த பகுதியில் உள்ள ராமலிங்கம் என்பவரது வீட்டிற்குள் புகுந்து ஒளிந்து கொண்டார். அங்கும் நுழைந்து ராஜபாண்டி, ராஜராஜனை கத்தியால் குத்தியதோடு, அங்கிருந்த சிலிண்டரை எடுத்து அவரது தலையில் போட்டு கொன்று விட்டு தப்பினார். இதையடுத்து ராஜராஜனின் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் புதுக்கோட்டை-பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து ராஜபாண்டியை கைது செய்தனர்</p>
Source: Read Full Article