
<p>விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் வேளாண்மைத் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள், விவசாயிகளுக்கான சேவைகள் மற்றும் வேளாண் பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.</p>
<p>மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், மாவட்டத்தில் வேளாண்மைத் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள், விவசாயிகளுக்கான சேவைகள் மற்றும் வேளாண் பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கைகளை தொடர்ந்து கேட்டறிந்து, அவற்றை உரிய முறையில் பரிசீலித்து, விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என அறிவுறுத்தியதோடு, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, குறைகளை திறம்பட நிவர்த்தி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. </p>
<p>மேலும், விவசாயிகள் பதிவேடு (Farmers Registry) பணிகளின் முன்னேற்றம் குறித்தும், விவசாயிகளின் விவரங்களை சரியான முறையில் பதிவு செய்து, அரசின் நலத்திட்டங்களை உரிய பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.</p>
<p>மாவட்டத்தில் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு (Digital Crop Survey) பணிகளை துரிதப்படுத்தி, நெல் உள்ளிட்ட தானியப் பயிர்கள் மற்றும் இதர பயிர்கள் குறித்த விவரங்களை சரியாக பதிவு செய்ய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. உழவர் சந்தைகள் மற்றும் e-NAM செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, விவசாயிகள் தங்களது விளைபொருட்களை நேரடியாக சந்தைப்படுத்தி, உரிய விலை பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் உழவர் சந்தைகளின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. </p>
<p>விவசாயிகளை ஒருங்கிணைத்து உற்பத்தி, மதிப்புக்கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துதல் வாய்ப்புகளை மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதோடு, மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் பணிகளை முறையாக மேற்கொண்டு, விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை உரிய முறையில் கொள்முதல் செய்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. </p>
<p>விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடன்றி கிடைப்பதை உறுதி செய்வதோடு, உரங்களின் இருப்பு, விநியோகம் மற்றும் விற்பனை நிலவரங்களை தொடர்ந்து கண்காணித்து, விவசாயிகளின் தேவைகளுக்கேற்ப உரிய உரங்கள் கிடைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதோடு, மாவட்டத்தில் விவசாயிகள் அரசு நலத்திட்டங்களைப் பெற்று பயன்பெற வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை போன்ற அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். </p>
Source: Read Full Article