
<p style="text-align: justify;"><strong>திருவாரூர்: </strong>தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை எந்த நியாயவிலை கடைகளிலும் பெற்றுக்கொள்ளலாம் என மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. ஆனால், அரசு வெளியிட்ட இந்த உத்தரவுக்குச் சற்றும் மதிப்பளிக்காமல், ரேஷன் கடை ஊழியர் ஒருவர் பொதுமக்களிடம் ஆணவத்துடன் பேசும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.</p>
<h3 style="text-align: justify;">சட்டப்பேரவையில் அமைச்சரின் முக்கிய அறிவிப்பு</h3>
<p style="text-align: justify;">சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மற்றும் கூட்டுறவுத் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் சாமானிய மக்களுக்குப் பல்வேறு புதிய வசதிகளை அறிவித்தார்.</p>
<p style="text-align: justify;">பொதுமக்கள் இனி தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குறிப்பிட்ட நியாயவிலைக் கடைகளுக்கு மட்டுமே சென்று பொருட்கள் வாங்க வேண்டிய அவசியமில்லை என்றும், தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு நியாயவிலைக் கடையிலும் தங்களுக்குரிய ரேஷன் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெளிவுபடுத்தினார். மேலும், குடும்ப அட்டை அசலாக கையில் இல்லாவிட்டாலும் கூட, கைபேசியில் உள்ள அட்டையின் நகல் அல்லது 'சாப்ட் காப்பி' காண்பித்தால் பொருட்களை வழங்க வேண்டும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்திருந்தார்.</p>
<h3 style="text-align: justify;">ஆணவமாகப் பேசிய ரேஷன் கடை ஊழியர்</h3>
<p style="text-align: justify;">அமைச்சரின் இந்த அறிவிப்பு சாமானிய மக்கள் மற்றும் வெளியூரில் தங்கி பணிபுரிபவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இருப்பினும், சில நியாயவிலைக் கடை ஊழியர்கள் அரசின் இந்த உத்தரவை சிறிதும் மதிக்காமல் செயல்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதன் உச்சக்கட்டமாக, திருவாரூர் மாவட்டம் EB காலனியில் செயல்பட்டு வரும் '18AP041PN' எண் கொண்ட நியாயவிலைக் கடையில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பொருட்கள் வாங்கச் சென்ற வெளியூர்வாசிகளுக்கும், வேறு கடைகளில் குடும்ப அட்டை வைத்துள்ள பொதுமக்களுக்கும் பொருட்கள் வழங்க முடியாது என்று அங்கிருந்த ஊழியர் குருமூர்த்தி மறுத்துள்ளார்.</p>
<h3 style="text-align: justify;">அரசு மீது குற்றச்சாட்டு மற்றும் வைரல் வீடியோ</h3>
<p style="text-align: justify;">பொருட்கள் தர மறுத்த ஊழியர் குருமூர்த்தியிடம் பொதுமக்கள் அமைச்சரின் அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பியபோது, அவர் மிகவும் அலட்சியமாகவும் ஆணவத்துடனும் பதிலளித்துள்ளார். மேல் அதிகாரிகள் தங்களுக்குப் பொருட்கள் வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாகக் கூறிய அந்த ஊழியர், அரசு போதுமான அளவு பொருட்களைக் கடைகளுக்கு அனுப்புவதில்லை என்றும், அரசு மீது நேரடியாகக் குற்றம் சாட்டிப் பேசினார். “அமைச்சர் சொன்னால் நாங்க கேட்கணுமா?” என்னும் தொனியில் அவர் பேசிய பேச்சு அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.</p>
<h3 style="text-align: justify;">அரசு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை</h3>
<p style="text-align: justify;">பொதுமக்களின் நலனுக்காக அரசு சட்டப்பேரவையில் அறிவித்த உத்தரவை, களத்தில் உள்ள ஊழியர்கள் மதிக்காமல் செயல்படுவது புதிய <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர். அமைச்சரின் உத்தரவுக்கே இவ்வளவுதான் மரியாதையா என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.</p>
<p style="text-align: justify;">சாமானிய மக்களை அலட்சியப்படுத்தி, அரசு மீது அவதூறு பரப்பும் வகையில் பேசிய சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடை ஊழியர் மீது கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை உயர் அதிகாரிகள் உடனடியாகக் கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் நுகர்வோர் அமைப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.</p>
Source: Read Full Article