
<h2>சிஎம் விஜய் குரலில் மோசடி வீடியோ</h2>
<p>நவீன காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பங்களும் மாறி வருகிறது. அந்த வகையில், உள்ளங்கைக்குள் உலகம் வந்துவிட்டது. இந்த நிலையில் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி மோசடி சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>யின் இந்தி குரல்வடிவத்துடன் கூடிய Al மூலம் உருவாக்கப்பட்ட 'டீப் ஃபேக்' வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் பரப்பப்பட்டது. அந்த வீடியோக்களில், நிதி உதவி பெற ஒரு வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக வந்த புகாரையடுத்து தமிழக போலீசார் அந்த குற்றவாளியை கண்டுபிடிக்க களத்தில் இறங்கினர். இதனையடுத்து ராஜஸ்தானில் வைத்து அந்த மோசடி நபரை போலீசார் தட்டி தூக்கியுள்ளனர். </p>
<h2>நிதி உதவி பெற ஒரு வாட்ஸ்அப் எண்</h2>
<p>இது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சிபிசிஐடி (CBCID) சைபர் குற்றப் பிரிவு மேற்கொண்ட வழக்கமான இணையவழி கண்காணிப்பின் போது. தமிழ்நாடு முதலமைச்சர் போன்று உருவகப்படுத்தி, இந்தி குரல்வடிவத்துடன் கூடிய Al மூலம் உருவாக்கப்பட்ட 'டீப் ஃபேக்' வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் பரப்பப்பட்டது கண்டறியப்பட்டது. அப்பாவி பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த வீடியோக்கள். ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் பரப்பப்பட்டுள்ளன. அந்த வீடியோக்களில், நிதி உதவி பெற ஒரு வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்கப்பட்டிருந்தது. </p>
<h2>2 தனிப்படைகள் அமைப்பு</h2>
<p>மோசடி செய்பவர்கள் இந்த AI வீடியோக்களைப் பயன்படுத்தி மத்தியப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பலரை ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இந்த டீப் ஃபேக் Al வீடியோக்களை நீக்கியதுடன். சேவை வழங்குநரிடமிருந்து தகவல்களைப் பெற்ற சிபிசிஐடி, டிஜிட்டல் ஆதாரங்களை விரிவாக ஆய்வு செய்து, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் சந்தேக நபர்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி உயரதிகாரிகளின் மேற்பார்வையில் பல்வேறு தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான காவல் ஒருங்கிணைப்பு மூலம் கைது நடவடிக்கை திட்டமிடப்பட்டு குற்றவாளியைக் கண்டுபிடிக்க ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு 2 தனிப்படைகள் அனுப்பி வைக்கப்பட்டன. </p>
<h2>ராஜஸ்தானில் குற்றவாளி கைது</h2>
<p>ராஜஸ்தான் காவல்துறையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு. முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ராஜஸ்தான் மாநிலம். ஆல்வார் மாவட்டம், லட்சுமண்கர், பூந்தோலியைச் சேர்ந்த ஜஹூர் கானின் மகன் ஷயாபு கான் (28) என்பவர் 12.09.2026 அன்று ஆல்வார் மாவட்டத்தின் உட்பகுதியில் கைது செய்யப்பட்டார். குற்றத்திற்க்காக பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்கள், சிம் கார்டுகள் மற்றும் சிபியு (CPU) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குற்றவாளி ராஜஸ்தானில் இருந்து PT வாரண்ட் மூலம் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.</p>
<h3> பாகிஸ்தான் ஃபேஸ்புக் ஐடியில் போலி வீடியோ</h3>
<p>குற்றவாளி தனியாகச் செயல்பட்டாரா அல்லது ஏதேனும் பெரிய நெட்வொர்க்கின் ஒரு பகுதியாகச் செயல்பட்டாரா என்பதைக் கண்டறிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், இதுபோன்ற பல வீடியோக்கள் பாகிஸ்தானைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஃபேஸ்புக் ஐடிகளில் பகிரப்பட்டு வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், வெளிநாட்டு குற்றவாளிகளைக் கண்டறியவும், அவர்களுக்கு உள்ளூர் அளவில் உதவியவர்களை வெளிக்கொண்டு வரவும் தீவிர டிஜிட்டல் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/rice-or-roti-which-is-better-for-energy-274499" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article