
<p style="text-align: justify;">சென்னை: அநீதியை அழித்து தர்மத்தைக் காக்கவும், பக்தர்களின் துயர்துடைத்து நல்வழிப்படுத்தவும் அவதரித்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் புனிதமான திருநாள் கிருஷ்ண ஜெயந்தியாகும். "தூய அன்புடன் நம்மை வழிபடும் பக்தர்களின் குறைகளைத் தீர்க்க பகவான் ஏதாவது ஒரு வடிவில் நிச்சயம் ஓடி வருவார்" என்ற நம்பிக்கையை இந்த நன்னாள் நமக்கு உணர்த்துகிறது.</p>
<p style="text-align: justify;">கிருஷ்ண ஜெயந்தி அன்று பெரிய அளவில் ஆடம்பரமாகப் பூஜைகள் செய்ய முடியாவிட்டாலும், எளிமையாகச் செய்யக்கூடிய முக்கியமான வழிபாட்டு முறைகளைப் பின்பற்றினாலே கிருஷ்ணரின் அருளை முழுமையாகப் பெற முடியும்.</p>
<p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/02/635f9accccf73c4f7f70bcb5fac821b61788358931541733_original.jpg" /></p>
<p style="text-align: justify;"><strong>கிருஷ்ண ஜெயந்தி தோன்றிய வரலாறு மற்றும் நிஷித கால பூஜை நேரம்</strong></p>
<p style="text-align: justify;">மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணர், ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் சேர்ந்த நள்ளிரவு வேளையில் மதுரா சிறைச்சாலையில் அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.</p>
<p style="text-align: justify;"><strong>பூஜை நேரம்:</strong> கிருஷ்ண ஜெயந்தி அன்று மாலை 6 மணிக்கு மேல் கிருஷ்ணரை வழிபடுவது சிறந்தது.</p>
<p style="text-align: justify;"><strong>சிறப்பு நேரம் (நிஷித காலம்):</strong> பகவான் அவதரித்த நள்ளிரவு நிஷித கால பூஜையான இரவு 11:57 முதல் அதிகாலை 12:43 மணி வரையிலான நேரத்தில் வீடுகளிலேயே விளக்கேற்றி வழிபடுவது அளப்பரிய புண்ணியத்தையும் பலன்களையும் தரும்.</p>
<p style="text-align: justify;"><strong>கிருஷ்ணரின் அருளைப் பெறச் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்</strong></p>
<p style="text-align: justify;">விரதம் இருக்க முடியாதவர்கள் கூட இந்த எளிய வழிபாட்டு நடைமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் விசேஷமானது:</p>
<p style="text-align: justify;">இல்லத்தை சுத்தம் செய்தல்: கிருஷ்ண ஜெயந்திக்கு முந்தைய நாளே வீட்டைத் தூய்மை செய்து, கிருஷ்ணரின் படம் அல்லது விக்ரகங்களைச் சுத்தப்படுத்தித் தயார் நிலையில் வைக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">கிருஷ்ணர் பாதம் வரைதல்: பூஜை நாளன்று மாலையில் பச்சரிசி மாவினால் வீட்டு வாசலிலிருந்து பூஜை அறை வரை சின்னஞ்சிறு குழந்தையின் பாதம் போன்ற "கிருஷ்ணர் பாதம்" கோலமிட வேண்டும். இது பால கிருஷ்ணனே நேரில் நம் வீட்டிற்குள் அடியெடுத்து வைப்பதாக ஐதீகம்.</p>
<p style="text-align: justify;">துளசி மற்றும் மலர் அலங்காரம்: மஞ்சள் நிற மலர்கள் அல்லது வாசனை மலர்களால் கிருஷ்ணரை அலங்கரித்து, கட்டாயமாகத் துளசி இலைகளைச் சாற்றி நெய் தீபமேற்றி வழிபட வேண்டும்.</p>
<p style="text-align: justify;">பிடித்தமான நைவேத்தியம் படைத்தல்: கிருஷ்ணருக்குப் பிரியமான வெண்ணெய், அவல் பாயாசம், பால் சோறு அல்லது சீடை, முறுக்கு போன்ற பலகாரங்களைப் படைக்க வேண்டும். பூஜை முடிந்ததும் இந்தப் பிரசாதத்தை முதலில் சிறு குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இதனால் கிருஷ்ணரே நேரில் வந்து உண்டு அருளுவதாக நம்பிக்கை.</p>
<p style="text-align: justify;">மந்திர பாராயணம் மற்றும் கதைகள்: கிருஷ்ண ஜெயந்தி அன்று ஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற மந்திரங்களை உச்சரித்து, கிருஷ்ண லீலைகள் குறித்த கதைகளைப் படிப்பது அல்லது கேட்பது அளப்பரிய நன்மைகளைத் தரும்.</p>
<p style="text-align: justify;"><strong>சரி யாரெல்லாம் விரதம் இருக்கலாம்?</strong></p>
<p style="text-align: justify;">குழந்தைப் பாக்கியத்திற்காக நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் தம்பதிகள் கிருஷ்ண ஜெயந்தி நாளன்று "சந்தான கோபால கிருஷ்ணரை" மனதார நினைத்து உபவாசமாக விரதம் இருப்பது மிகச் சிறந்த பலனைத் தரும். மற்றவர்கள் முழு உபவாசம் இருக்க வேண்டிய கட்டாயமில்லை; சாத்வீக உணவை உட்கொண்டு, பக்தி மற்றும் மகிழ்ச்சியுடன் குழந்தை கிருஷ்ணனை வீட்டிற்கு அழைத்து வழிபட்டால் பகவான் கிருஷ்ணரின் பரிபூரண அருள் கிடைக்கும்.</p>
Source: Read Full Article