
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி, பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்ததாக 4 இளைஞர்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 ஆயிரம் டாபென்டாடால் போதை மாத்திரைகள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகளின் மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.</p>
<p style="text-align: justify;">தஞ்சாவூர் மாநகரில் போதை மாத்திரைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கீழவாசல் பகுதியில் சோதனை நடத்தினர்.</p>
<p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/05/c137209d80ea589c5f9fb5af527921b41788615815475733_original.jpg" /></p>
<p style="text-align: justify;">அப்போது கீழவாசல் வண்ணாரத்துறையை சேர்ந்த திராவிடமணி மகன் பிரகாஷ் என்ற மாடு பிரகாஷ் (26) என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், பிரபல ரவுடியாக இருந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.</p>
<p style="text-align: justify;">தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அவரது நண்பர்களான கீழவாசல் சின்னையபிள்ளை தெருவை சேர்ந்த ஹாஜா மைதீன் மகன் முகமது அப்பாஸ் (25), கீழவாசல் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த சந்திரபோஸ் மகன் சுபாஷ் (24), அன்னப்பேட்டையை சேர்ந்த முருகேசன் மகன் சஞ்சய் சம்பத் (23) ஆகியோருக்கும் போதை மாத்திரை விற்பனையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.</p>
<p style="text-align: justify;">இதையடுத்து போலீசார் 4 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் இருந்து 6 ஆயிரம் டாபென்டாடால் போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், போதை மாத்திரைகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.</p>
<p style="text-align: justify;">இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், பிரகாஷ், முகமது அப்பாஸ், சுபாஷ், சஞ்சய் சம்பத் ஆகிய 4 பேரையும் தஞ்சாவூர் கிழக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். கிழக்கு போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.</p>
<p style="text-align: justify;"><strong>ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியது அம்பலம்</strong></p>
<p style="text-align: justify;">தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. முகமது அப்பாஸ், நாக்பூரில் உள்ள சாய் டிரேடிங் என்ற நிறுவனத்தில் இருந்து போதை மாத்திரைகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த மாத்திரைகள் பார்சல் மூலம் தஞ்சாவூருக்கு வரவழைக்கப்பட்டதாகவும், அவற்றை தனது நண்பர்களுடன் இணைந்து விற்பனை செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.</p>
<p style="text-align: justify;">குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதன் மூலம் மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டார்களா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
<p style="text-align: justify;"><strong>ஏற்கனவே 1,000 மாத்திரைகள் பறிமுதல்</strong></p>
<p style="text-align: justify;">இதே போதை மாத்திரை விற்பனை தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 30-ந் தேதி 2 பேர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:</p>
<p style="text-align: justify;">தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் சதீஷ்குமார் (29), திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ரஞ்சித்குமார் (24) ஆகிய இருவரும் இணைந்து நாக்பூரில் உள்ள நிறுவனத்தில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கியுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">ரஞ்சித்குமார் திருவையாறு பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து, அங்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயன்றுள்ளார். இதற்காக தனது நண்பரான சதீஷ்குமாரையும் வரவழைத்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இதுகுறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 30-ந் தேதி இருவரையும் பிடித்து சோதனை செய்ததில், அவர்களிடம் இருந்து 1,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவரையும் கைது செய்து மரூர் போலீசாரிடம் ஒப்படைத்தோம்.</p>
<p style="text-align: justify;">அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், முகமது அப்பாஸ் மற்றும் பிரகாஷ் ஆகியோர் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி தஞ்சாவூரில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.</p>
<p style="text-align: justify;">தஞ்சாவூரில் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வரவழைத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யும் கும்பல் செயல்பட்டு வருவது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். போதை மாத்திரைகள் எங்கிருந்து பெறப்பட்டன, அவற்றை அனுப்பியவர்கள் யார், தஞ்சாவூரில் வேறு யாருக்கெல்லாம் இந்த விற்பனையில் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை ஆய்வு செய்து, ஆன்லைன் ஆர்டர் மற்றும் விற்பனை தொடர்பான தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இதன் மூலம் தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் போதை மாத்திரை விற்பனை வலையமைப்பின் பின்னணியில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p>
<p style="text-align: justify;">பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல் பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களிடம் போதைப்பொருள் பழக்கம் ஏற்படுவதை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. தஞ்சாவூர் நகரில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை கட்டுப்படுத்த போலீசார் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஒரே நேரத்தில் 6 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
Source: Read Full Article