
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: நேபாளம் வெள்ளப்பெருக்கில் மாயமான தமிழகத்தை சேர்ந்தவர்களின் உறவினர்கள் 23 பேரிடம் இருந்து இன்று டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேகரிக்கப்பட்டது.</p>
<p style="text-align: justify;">நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கில் மாயமான தமிழகத்தைச் சேர்ந்த புனித யாத்திரிகர்களின் நிலை குறித்து இதுவரை உறுதியான தகவல் கிடைக்காத நிலையில், அவர்களின் உறவினர்களிடம் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கும் பணி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது.</p>
<p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/05/b667ca50bd2fc665cd1c7c5861a834ea1788613893828733_original.jpg" /></p>
<p style="text-align: justify;">கும்பகோணத்தில் செயல்பட்டு வரும் தனியார் டிராவல்ஸ் ஏஜென்சி மூலம் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட மொத்தம் 57 பேர் கைலாஷ் புனித யாத்திரைக்காக நேபாளம் சென்றுள்ளனர். இதில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேரும், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேரும் இடம் பெற்றிருந்தனர்.</p>
<p style="text-align: justify;">புனித யாத்திரைக்காக சென்ற அவர்கள் நேபாளத்தில் இருந்தபோது கடந்த 26-ம் தேதி அங்கு ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வெள்ளத்தில் பலர் மாயமாகினர். இதில் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.</p>
<p style="text-align: justify;">வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல நாட்கள் கடந்த நிலையிலும், மாயமானவர்களின் நிலை குறித்து அவர்களது குடும்பத்தினருக்கு இதுவரை உறுதியான தகவல் கிடைக்கவில்லை.<br />இந்த சூழலில், மாயமானவர்களின் அடையாளத்தை அறிவியல் ரீதியாக உறுதி செய்வதற்காக டிஎன்ஏ பரிசோதனை நடத்தும் நடவடிக்கையை நேபாள அரசு மேற்கொண்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">மாயமானவர்களின் உறவினர்களிடம் இருந்து டிஎன்ஏ பரிசோதனைக்கான ரத்த மாதிரிகளை அவர்களது சொந்த பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சேகரிக்க வேண்டும் என நேபாள அரசு, இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தடயவியல் மருத்துவத் துறையில் நேற்று உறவினர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்தப் பணி நடைபெற்றது.</p>
<p style="text-align: justify;">தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சித்ரா மகன் ராஜா, அவரது மகன் கோபால், சிவயோகம் மகள் அசோக், அன்பழகி மகன் அருண்மொழி, கரூர் மாவட்டத்தை சேர்ந்த அன்பரசன் மகள் பிருந்தா அவரது மகள் வித்யா, தனலட்சுமி மகள் கோகிலா வாணி அவரது மகள் தீபா, கற்பகம் மகள் பிரியா அவரது மகன் லோகேஷ், தமிழரசி அசோகன் மகன் ரஞ்சித், இளவரசன் மகன் முரளி, மயிலாடுதுறை மாவட்டம் வெங்கட்ராமன் மகன் ஆறுமுகம், திருச்சியை சேர்ந்த விமலா மகள் மதுமதி உள்பட 23 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் இருக்கும் பணி தடய அறிவியல் துணை இயக்குனர் ராஜமோகன் தலைமையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மணிமேகலா முன்னிலையில் மருத்துவர்கள் தங்கமணி உள்ளிட்டோர் மேற்கொண்டனர். இந்த பணிகள் ஒரு வார காலத்திற்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் ரேவதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p>
<p style="text-align: justify;">பின்பு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 16 பேரில் நிலை இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து அவர்களின் குடும்பத்துடன் தொடர்பில் உள்ளேன். இங்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவுகள் சீனாவில் உள்ள போர்ட்டலுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு ரத்த மாதிரிகள் ஒத்து போனால் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;"> </p>
Source: Read Full Article