
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கலைஞர் நகர் பகுதியில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 இடங்களில் மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p style="text-align: justify;">வீட்டில் உள்ளவர்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள் நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். மேலும், மோப்ப நாய்களிடம் இருந்து தப்பிக்க மிளகாய்ப் பொடிக்கு பதிலாக கரம் மசாலா பொடியை தூவிச் சென்ற சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p style="text-align: justify;">தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கலைஞர் நகர் 2-ம் தெருவைச் சேர்ந்தவர் லூர்து மேரி (62). இவரது மகன் ராஜேஷ்கண்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் லூர்து மேரி தனது மருமகள் மற்றும் பேரப்பிள்ளையுடன் வசித்து வருகிறார்.</p>
<p style="text-align: justify;">நேற்று இரவு லூர்து மேரி, மருமகள் மற்றும் பேரப்பிள்ளையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். அவர்கள் வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்த 12 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.</p>
<p style="text-align: justify;">மேலும், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.<br />நேற்று காலை எழுந்த லூர்து மேரி, வீட்டில் பீரோ திறந்து கிடந்ததையும், பொருட்கள் சிதறிக் கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் திருட்டு போனதும் தெரியவந்தது.</p>
<p style="text-align: justify;">இதுகுறித்து லூர்து மேரி தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த ரேகைகள் சேகரிக்கப்பட்டது. இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள், போலீஸ் மோப்ப நாய்களிடம் இருந்து தப்பிக்க வீட்டின் சமையலறையில் இருந்த பொடியை எடுத்து பல்வேறு இடங்களில் தூவியுள்ளனர். மிளகாய்ப் பொடி என நினைத்து எடுத்த அவர்கள், தவறுதலாக கரம் மசாலா பொடியை தூவிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.</p>
<p style="text-align: justify;">இதேபோல் கலைஞர் நகர் 3-வது தெருவைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் பூக்கடையில் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் வெளிக்கேட்டை திறந்து வீட்டிற்குள் புகுந்துள்ளனர். பின்னர் பீரோ சாவியை எடுத்து, அதிலிருந்த 1 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">அதே பகுதியில் பழ வியாபாரம் செய்து வரும் ராஜாவாசுதேவன் வீட்டிலும் திருட்டு நடந்துள்ளது. அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து சாமி படத்தின் அருகே இருந்த மணிப்பர்சில் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். இந்த பணத்தை அவர் கடன் தவணை செலுத்துவதற்காக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. திருடிச் சென்ற மர்ம நபர்கள் மணிப்பர்சை அந்த தெருவின் ஒரு மூலையில் வீசிச் சென்றுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">மேலும், அதே தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இவ்வாறு ஒரே நாளில் ஒரே பகுதியில் அடுத்தடுத்து 4 இடங்களில் திருட்டு நடந்துள்ளதால் கலைஞர் நகர் பகுதி மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த 4 சம்பவங்களிலும் ஒரே கும்பல் கைவரிசை காட்டியிருக்கலாம் என சந்தேகத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">இதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களின் அடிப்படையில் மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p>
Source: Read Full Article