
<h2><strong>"4 சவரன் நகை பறிப்பு"</strong></h2>
<p>கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்தவர் சரஸ்வதி ( வயது 70 ). இவர் வீட்டின் முன் உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் மாஸ்க்குடன் சரஸ்வதி அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து அங்கு தயாராக இருந்த இளம்பெண்ணுடன் ஸ்கூட்டரில் தப்பினார்.</p>
<p>இது குறித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 தனிப்படை அமைத்து அவர்களை தேடி வந்தனர். அப்போது சி.சி.டி.வி கேமராவில் சிக்கிய ஸ்கூட்டர் எண்ணை வைத்து திருப்பூரை சேர்ந்த பரணிதரன் ( வயது 21 ) மற்றும் அவரது காதலி நெல்லையை சேர்ந்த சிந்து ( வயது 21 ) ஆகியோர் என்பதும், இருவரும் கோவை கே.ஜி.சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் 2 - ம் ஆண்டு எம்.பி.ஏ ஒன்றாக படித்து வந்ததும் தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.</p>
<h2><strong>விசாரணையில் அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது ;</strong></h2>
<p>பரணிதரன் ஜாலியாக சுற்ற தனது நண்பர்களிடம் கடன் வாங்கியுள்ளார். அதனை அடைக்கவும், சொகுசு கார் வாங்கி ஆடம்பரமாக வாழ அசைப்பட்டுள்ளனர். இதனால் பெண்களிடம் நகை பறிக்க திட்டமிட்டுள்ளனர்.</p>
<p>அதற்காக சிசிடிவி கேமரா இல்லாத இடங்களை இருவரும் தேடி அலைந்துள்ளனர். பின்னர் வெள்ளலூரை கறிக்கடை பஸ் நிறுத்தம் அருகே உள்ள வீட்டை தேர்வு செய்து சரஸ்வதியிடம் நகை பறித்துள்ளனர். அந்த நகையை ஓரிரு நாட்கள் கழித்து விற்பனை செய்து பணமாக்கி கொள்ளலாம் என திட்டமிட்டுள்ளனர்.</p>
<p>ஆனால் அதற்குள் இருவரும் போலீசாரிடம் சிக்கி கொண்டனர். இவ்வாறு போலீசார் கூறினர். காதலனின் கடனை அடைக்கவும், சொகுசு கார் வாங்கவும் கல்லூரி மாணவி கொள்ளைக்காரியாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
Source: Read Full Article