
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: இந்தியன் ரயில்வேயில் பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே பணியாளர் தேர்வாணையம் சார்பில், நாடு முழுவதும் காலியாக உள்ள 3,996 ஜூனியர் என்ஜினியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">பொறியியல் டிப்ளமோ முடித்தவர்களுக்கும், அறிவியல் பட்டதாரிகளுக்கும் மத்திய அரசு துறையில் பணியாற்றுவதற்கான முக்கிய வாய்ப்பாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 13, 2026 என்பதால், தகுதியானவர்கள் காலதாமதம் செய்யாமல் விண்ணப்பிக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;"><strong>ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு யார் விண்ணப்பிக்கலாம்?</strong></p>
<p style="text-align: justify;">இந்த ஆட்சேர்ப்பில் முக்கியமாக ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமெண்டேஷன், டெலிகம்யூனிகேஷன் மற்றும் மெக்கானிக்கல் உள்ளிட்ட பொறியியல் பிரிவுகளில் மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.</p>
<p style="text-align: justify;">ரயில்வே துறையின் தொழில்நுட்பப் பிரிவுகளில் பணியாற்ற விரும்பும் டிப்ளமோ பொறியாளர்களுக்கு இது குறிப்பிடத்தக்க வாய்ப்பாக அமைந்துள்ளது.</p>
<p style="text-align: justify;"><strong>டிப்போ மெட்டீரியல் சூப்பரிண்டெண்ட் பணிக்கும் வாய்ப்பு</strong></p>
<p style="text-align: justify;">டிப்போ மெட்டீரியல் சூப்பரிண்டெண்ட் பணியிடத்திற்கும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொறியியல் துறையில் ஏதேனும் ஒரு பிரிவில் மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ரயில்வேயின் பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் தொடர்பான நிர்வாகப் பணிகளில் ஈடுபட விரும்புவோருக்கு இந்தப் பதவி சிறந்த வாய்ப்பாக இருக்கும்.</p>
<p style="text-align: justify;"><strong>பி.எஸ்சி படித்தவர்களுக்கும் சான்ஸ்!</strong></p>
<p style="text-align: justify;">பொறியியல் படித்தவர்களுக்கு மட்டுமல்லாமல், அறிவியல் பட்டதாரிகளுக்கும் இந்த ஆட்சேர்ப்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கெமிக்கல் மற்றும் மெட்டலர்ஜிக்கல் அசிஸ்டெண்ட் பணிக்கு இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களை உள்ளடக்கிய பிரிவில், குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.</p>
<p style="text-align: justify;">ஒவ்வொரு பணியிடத்துக்கும் கல்வித் தகுதி மற்றும் பிற நிபந்தனைகள் மாறுபடக்கூடும் என்பதால், விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து தங்களது தகுதியை உறுதி செய்து கொள்ள வேண்டும்.</p>
<p style="text-align: justify;"><strong>மாதம் ரூ.35,400 சம்பளம்!</strong></p>
<p style="text-align: justify;">இந்தப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ரயில்வேயில் நிரந்தரமான பணிவாய்ப்பைப் பெற விரும்பும் இளைஞர்களுக்கு இந்த ஆட்சேர்ப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.</p>
<p style="text-align: justify;"><strong>வயது வரம்பு என்ன?</strong></p>
<p style="text-align: justify;">2027 ஜனவரி 1-ஆம் தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது உச்சவரம்பில் சலுகையும் வழங்கப்படும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.</p>
<p style="text-align: justify;"><strong>தேர்வு எப்படி நடைபெறும்?</strong></p>
<p style="text-align: justify;">தகுதியான விண்ணப்பதாரர்கள் பல்வேறு கட்டங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.</p>
<p style="text-align: justify;">முதலில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். அதன்பின்னர் மருத்துவத் தகுதி உள்ளிட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு தகுதியானவர்கள் இறுதியாக பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.</p>
<p style="text-align: justify;">ஆன்லைன் எழுத்துத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் விவரங்கள் மற்றும் ஒவ்வொரு கட்டத்திற்கான நடைமுறைகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு முக்கியமான தகவலாக, எழுத்துத் தேர்வுக்கான கேள்விகள் ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;"><strong>விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?</strong></p>
<p style="text-align: justify;">எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவினருக்கு ரூ.250 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">இதர அனைத்து பிரிவினருக்கும் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வு நடைமுறைகளுக்குப் பிறகு விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டணத் தொகை திரும்ப வழங்கப்படும். ரூ.500 கட்டணம் செலுத்தியவர்களுக்கு ரூ.400 திருப்பி வழங்கப்படுவதுடன், எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்ட தகுதியான பிரிவினருக்கு விதிகளின்படி முழுக் கட்டணமும் திரும்ப வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;"><strong>விண்ணப்பிக்க செப்டம்பர் 13 கடைசி நாள்!</strong></p>
<p style="text-align: justify;">தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் இந்தியன் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">விண்ணப்பிக்கும்போது கல்விச் சான்றிதழ்கள், வயது விவரங்கள் மற்றும் பணிக்கு தேவையான தகுதிகள் அனைத்தையும் சரிபார்த்து பதிவு செய்ய வேண்டும். கடைசி நேரத்தில் இணையதள நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், தகுதியானவர்கள் முன்கூட்டியே விண்ணப்பிப்பது பாதுகாப்பானது.</p>
<p style="text-align: justify;">பொறியியல் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி படித்து, மத்திய அரசு பணியை இலக்காகக் கொண்டு தயாராகும் இளைஞர்களுக்கு ரயில்வே வழங்கியுள்ள இந்த 3,996 வேலைவாய்ப்புகள் ஒரு பொன்னான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 13-க்குள் விண்ணப்பித்து, ரயில்வே கனவை நனவாக்க தயாராகுங்கள்!</p>
Source: Read Full Article