
<p style="text-align: justify;"><strong>நாகை:</strong> இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. </p>
<p style="text-align: justify;">இந்தத் தேர்வுகளுக்குத் தயாராகும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்புக் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இப்போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தகுதியான தேர்வர்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி பலனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p>
<h3 style="text-align: justify;">எஸ்பிஐ மற்றும் ஐபிபிஎஸ் கிளார்க் பணியிடங்கள்</h3>
<p style="text-align: justify;">ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) அமைப்பானது ஜூனியர் அசோசியேட் (கிளார்க்) 2026-ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வின் மூலம் நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைகளில் காலியாக உள்ள 9,124 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பப் பதிவு இணையதளம் வழியாக நிறைவடைந்துள்ள நிலையில், முதல்நிலைத் தேர்வு வரவிருக்கும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்குத் தோராயமாக மாதம் ரூ.46,000 வரை ஊதியம் வழங்கப்படும். அதேபோன்று, ஐபிபிஎஸ் கிளார்க் 2026 தேர்வுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டு விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்துள்ளது. நாட்டின் 11 முக்கிய பொதுத்துறை வங்கிகளில் உள்ள 11,403 வாடிக்கையாளர் சேவை இணைப்பாளர் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படவுள்ள நிலையில், இதற்கான முதல்நிலைத் தேர்வு அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட உள்ளது.</p>
<h3 style="text-align: justify;">ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி கிராமப்புற வங்கிப் பணிகள்</h3>
<p style="text-align: justify;">பிராந்திய கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி 2026 அறிவிப்பும் தற்போது வெளிவந்துள்ளது. இத்தேர்வின் வாயிலாகக் கிராமப்புற வங்கிகளில் மொத்தம் 13,706 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இதில் ஆபிஸ் அசிஸ்டண்ட் பதவிக்கு 8,183 இடங்களும், அதிகாரி நிலை ஸ்கேல் 1, 2 மற்றும் 3 ஆகிய பதவிகளுக்கு 5,523 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் காலம் கடந்த 01.09.2026 அன்று தொடங்கி வரும் 21.09.2026 வரை நடைபெறுகிறது. ஆபிஸ் அசிஸ்டண்ட் பதவிக்கு 18 முதல் 28 வயதிற்குட்பட்டவர்களும், ஸ்கேல் 1 பதவிக்கு 18 முதல் 30 வயதினரும், ஸ்கேல் 2 பதவிக்கு 21 முதல் 32 வயதினரும் மற்றும் ஸ்கேல் 3 பதவிக்கு 21 முதல் 40 வயதிற்குட்பட்ட மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதிபெற்றவர்கள் ஆவர்.</p>
<p style="text-align: justify;">விருப்பமும் தகுதியும் உள்ள தேர்வர்கள் <a href="http://www.ibps.in">www.ibps.in </a>என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.</p>
<h3 style="text-align: justify;">நாகப்பட்டினத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்</h3>
<p style="text-align: justify;">மேற்கண்ட எஸ்பிஐ ஜூனியர் அசோசியேட், ஐபிபிஎஸ் கிளார்க் மற்றும் ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி ஆகிய வங்கிப் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிறப்புக் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் பின்புறம் இயங்கி வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாகக் கடந்த 01.09.2026 முதல் இந்த வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்த நேரடிப் பயிற்சி வகுப்புகளில் தவறாமல் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும், பயிற்சி வகுப்புகள் தொடர்பான விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 9499055916 என்ற வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்புகொண்டு பயன்பெறலாம் என்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.</p>
Source: Read Full Article