
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: இந்தியாவின் பாரம்பரிய கட்டிடக்கலை உலகையே வியக்க வைக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக மன்னர்கள் ஆட்சி செய்த காலங்களில் கட்டப்பட்ட கோயில்கள், அரண்மனைகள், மாளிகைகள், சத்திரங்கள் என ஒவ்வொரு கட்டிடமும் அக்கால மக்களின் கட்டிட அறிவுக்கும், நுணுக்கமான கலைத்திறனுக்கும் இன்றளவும் சாட்சியாக நிற்கின்றன. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக வரலாற்றை சுமந்து நிற்கும் முத்தம்மாள் சத்திரம், பழமையான கட்டிடக்கலையின் முக்கிய அடையாளமாக திகழ்கிறது.</p>
<p style="text-align: justify;"><strong>தஞ்சை முதல் தனுஷ்கோடி வரை சத்திரங்கள்!</strong></p>
<p style="text-align: justify;">தஞ்சாவூரை மராட்டிய மன்னர்கள் ஆட்சி செய்த காலகட்டமான கி.பி.1743 முதல் 1837 வரையிலான ஆண்டுகளில் பொதுமக்கள் மற்றும் யாத்திரிகர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் சத்திரங்கள் அமைக்கப்பட்டன. குறிப்பாக தஞ்சாவூரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான யாத்திரை வழித்தடத்தில் உணவு, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை வழங்கும் வகையில் ஏராளமான சத்திரங்கள் உருவாக்கப்பட்டன.</p>
<p style="text-align: justify;">தஞ்சாவூரில் காஞ்சி வீடு சத்திரம், சிரேயஸ் சத்திரம், சூரக்கோட்டையில் சைதாம்பாள்புரம் சத்திரம், ராசகுமாரபாயி சத்திரம், ஒரத்தநாட்டில் முத்தம்மாள் சத்திரம், பட்டுக்கோட்டை காசங்குளச் சத்திரம், மணமேல்குடி திரௌபதாம்பாள்புரம் சத்திரம், மீமிசலில் ராசகுமாரம்பாள் சத்திரம், ராமேசுவரம் சத்திரம், தனுஷ்கோடி சேதுக்கரை சத்திரம் உள்ளிட்ட பல்வேறு சத்திரங்கள் இந்த வரலாற்று பாதையின் முக்கிய அடையாளங்களாக இருந்துள்ளன.</p>
<p style="text-align: justify;"><strong>முத்தம்மாள் யார்?</strong></p>
<p style="text-align: justify;">ஒரத்தநாட்டின் முத்தம்மாள் சத்திரத்தின் பின்னணியில் ஒரு சோகமான வரலாறும் இருப்பதாக கூறப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">இரண்டாம் சரபோஜி மன்னரின் முதல் மனைவியான முத்தம்மாள், இளம் வயதிலேயே உயிரிழந்ததாகவும், அதற்கு முன்பு யாத்திரிகர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் பயன்படும் வகையில் சத்திரம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று மன்னரிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">அவரது நினைவாக கி.பி.1800-ம் ஆண்டு இரண்டாம் சரபோஜி மன்னரால் முத்தம்மாள் சத்திரம் கட்டப்பட்டதாக இங்குள்ள மராட்டிய கல்வெட்டு குறிப்பிடுகிறது.</p>
<p style="text-align: justify;">இதனால் இது வெறும் தங்கும் விடுதியாக மட்டுமல்லாமல், ஒரு மன்னரின் குடும்ப நினைவையும், அக்கால சமூக சேவை முறையையும், மராட்டிய கட்டிடக்கலையையும் ஒரே நேரத்தில் எடுத்துக்காட்டும் வரலாற்றுச் சின்னமாக விளங்குகிறது.</p>
<p style="text-align: justify;"><strong>யானை... குதிரை... தேர் சக்கரம்!</strong></p>
<p style="text-align: justify;">முத்தம்மாள் சத்திரத்தின் கட்டிட அமைப்பே பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. அழகிய தோரண அமைப்புடன் காணப்படும் நுழைவாயில், யானை மற்றும் குதிரைகள் பூட்டிய தேர் சக்கரத்தை நினைவூட்டும் கலை வேலைப்பாடுகள், பிரமாண்டமான முற்றங்கள், அவற்றை தாங்கி நிற்கும் தூண்கள் என ஒவ்வொரு பகுதியிலும் நுணுக்கமான வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.</p>
<p style="text-align: justify;">சத்திரத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் சிவலிங்கங்கள், மேல்தளத்தில் மரத்தால் அமைக்கப்பட்ட அலங்காரத் தூண்கள், பழமையான கிணறு உள்ளிட்டவை அக்கால வாழ்க்கை முறையையும் கட்டிட வடிவமைப்பையும் இன்றைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டுகின்றன.</p>
<p style="text-align: justify;">கருங்கல், செங்கல், சுண்ணாம்பு, காரை உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் பல ஆண்டுகளைக் கடந்தும் தனது பழமையை இழக்காமல் இருப்பது கட்டிடக்கலை நுட்பத்தின் சிறப்பை வெளிப்படுத்துகிறது.</p>
<p style="text-align: justify;"><strong>சத்திரம் முதல் பள்ளிக்கூடம் வரை!</strong></p>
<p style="text-align: justify;">ஒரு காலத்தில் யாத்திரிகர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் உணவு மற்றும் உறைவிடம் வழங்கிய இந்தக் கட்டிடம், பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் பள்ளிக்கூடமாகவும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">அதன்பிறகு விடுதி மாணவர்கள் தங்குமிடமாகவும் இந்தக் கட்டிடம் பயன்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு கட்டிடம் காலத்துக்கு ஏற்ப எவ்வாறு தனது பயன்பாட்டை மாற்றிக்கொண்டது என்பதற்கும் முத்தம்மாள் சத்திரம் சாட்சியாக உள்ளது.</p>
<p style="text-align: justify;"><strong>ஒரத்தநாட்டின் ‘தாஜ்மஹால்’!</strong></p>
<p style="text-align: justify;">ஆக்ராவுக்கு தாஜ்மஹால் என்றால், ஒரத்தநாட்டுக்கு முத்தம்மாள் சத்திரம் என்று உள்ளூர் மக்கள் பெருமையுடன் குறிப்பிடுகின்றனர். தாஜ்மஹால் ஒரு காதல் நினைவுச் சின்னமாக உலகப் புகழ் பெற்றிருந்தால், முத்தம்மாள் சத்திரம் ஒருபுறம் மன்னர் குடும்பத்தின் நினைவையும், மறுபுறம் மக்களுக்கான சேவை நோக்கில் உருவாக்கப்பட்ட சத்திர மரபையும் தன்னகத்தே கொண்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">இன்று வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தஞ்சை மாவட்டத்துக்கு வரும் வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தையும் இந்தப் பழமையான கட்டிடம் ஈர்த்து வருகிறது. நவீன கட்டிடங்கள் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், 200 ஆண்டுகளுக்கும் மேலாக நின்று கொண்டு ஒரு காலத்தின் வரலாற்றை சொல்லிக்கொண்டிருக்கும் முத்தம்மாள் சத்திரம், ஒரத்தநாட்டின் அடையாளமாக மட்டுமின்றி, தஞ்சை மண்ணின் கட்டிடக்கலை பாரம்பரியத்துக்கும் பெருமை சேர்க்கும் பொக்கிஷமாக திகழ்கிறது.</p>
<p style="text-align: justify;">வரலாற்றை புத்தகத்தில் மட்டும் படிப்பதல்ல... நம்மைச் சுற்றி நிற்கும் கட்டிடங்களிலும் அதை வாசிக்கலாம் என்பதற்கு முத்தம்மாள் சத்திரமே ஒரு வாழும் சாட்சி!</p>
Source: Read Full Article