
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாமன்னன் இராஜராஜ சோழன் மணிமண்டபத்தில் தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு ஓவிய மற்றும் சிற்பக் கண்காட்சி நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சி இன்றும் நடைபெறுகிறது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஓவியர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளதால், பொதுமக்கள் மற்றும் கலை ஆர்வலர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.</p>
<p style="text-align: justify;">தமிழகத்தின் பாரம்பரிய கலைகள் மற்றும் கலைப் பண்பாடுகளை பாதுகாத்து, அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கில், தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பில் மண்டல கலை பண்பாட்டு அலுவலகங்கள் மூலம் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p>
<p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/06/74fb75e3e4e1f88674451533abe42f3d1788699969891733_original.jpg" /></p>
<p style="text-align: justify;">அந்த வகையில், ஓவியம் மற்றும் சிற்பக் கலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதோடு, அவர்களின் கலைப்படைப்புகளை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்வதற்கும், படைப்புகளை சந்தைப்படுத்துவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் தஞ்சாவூரில் இந்த சிறப்பு கண்காட்சி நடத்தப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஓவியர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்களின் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.</p>
<p style="text-align: justify;"><strong>190-க்கும் மேற்பட்ட படைப்புகள்</strong></p>
<p style="text-align: justify;">கண்காட்சியில் மொத்தம் 160 ஓவியங்கள், 25 மரம் மற்றும் சுதை சிற்பங்கள், 5 புடைப்பு சிற்பங்கள் என 190-க்கும் மேற்பட்ட கலைப்படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.</p>
<p style="text-align: justify;">பாரம்பரிய கலை வடிவங்கள் முதல் நவீன ஓவிய பாணிகள் வரை பல்வேறு விதமான படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு படைப்பிலும் கலைஞர்களின் கற்பனைத்திறன், நுட்பம் மற்றும் கலைநயம் வெளிப்படும் வகையில் அமைந்துள்ளதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.</p>
<p style="text-align: justify;">ஓவியங்களின் வண்ணக் கலவைகள், இயற்கைக் காட்சிகள், மனிதர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஓவியங்கள், சமூக சிந்தனையை வெளிப்படுத்தும் படைப்புகள் என பல்வேறு கருப்பொருள்களில் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் மரம் மற்றும் சுதை சிற்பங்களும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.</p>
<p style="text-align: justify;">கலைஞர்களின் படைப்புகளை ஒரே இடத்தில் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு மட்டுமின்றி, கலைஞர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி, அவற்றை சந்தைப்படுத்துவதற்கும் இந்த கண்காட்சி முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது.</p>
<p style="text-align: justify;"><strong>கண்காட்சி தொடக்க விழா</strong></p>
<p style="text-align: justify;">கண்காட்சியின் தொடக்க விழாவில் தஞ்சாவூர் சவகர் சிறுவர் மன்ற ஓவிய ஆசிரியர் சீ.அமுதன் வரவேற்புரையாற்றினார். தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் ம.இராஜராமன் கண்காட்சியின் நோக்கம் மற்றும் கலைஞர்களை ஊக்குவிப்பதன் அவசியம் குறித்து பேசினார்.</p>
<p style="text-align: justify;">தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.<a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>சரவணன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, அரசு கவின் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் பா.இராதா, மாவட்ட சுற்றுலா அலுவலர் எஸ்.வரதராஜன், ஓவியர் மற்றும் புகைப்படக் கலைஞர் ஆர்.மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வல்லம் சவகர் சிறுவர் மன்ற ஓவிய ஆசிரியர் ச.மாதவன் நன்றி கூறினார்.</p>
<p style="text-align: justify;"><strong>மாணவர்கள் ஆர்வம்</strong></p>
<p style="text-align: justify;">கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளதால், பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி மாணவ-மாணவியர்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.</p>
<p style="text-align: justify;">ஓவியங்கள் மற்றும் சிற்பங்களை நேரில் பார்வையிட்ட மாணவர்கள், அவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள கலை நுட்பங்கள் குறித்து கலைஞர்களிடம் கேட்டறிந்தனர். கலை ஆர்வலர்களும் பல்வேறு படைப்புகளை ரசித்து, கலைஞர்களின் முயற்சியை பாராட்டினர்.</p>
<p style="text-align: justify;">“ஒவ்வொரு ஓவியத்திலும் கலைஞர்களின் கற்பனை வளமும், ஒவ்வொரு சிற்பத்திலும் அவர்களின் உழைப்பும் திறமையும் வெளிப்படுகிறது. இத்தகைய கண்காட்சிகள் கலைஞர்களுக்கு ஊக்கத்தை அளிப்பதோடு, மாணவர்களிடம் கலை ஆர்வத்தையும் வளர்க்கும்” என பார்வையாளர்கள் தெரிவித்தனர்.</p>
<p style="text-align: justify;">இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சி, இன்று (செப்.6) மாலை வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் கண்காட்சியை பார்வையிடலாம்.</p>
Source: Read Full Article