
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 4,724 செவிலியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. செவிலியர் பட்டயப்படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் பெற்ற தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.21 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட உள்ளது.</p>
<p style="text-align: justify;">இதில் திருச்சி மாவட்டத்தில் 205 பணியிடங்களும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 166 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளதால், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த செவிலியர் வேலைதேடுவோருக்கு இது முக்கியமான வேலைவாய்ப்பாக அமைந்துள்ளது.</p>
<p style="text-align: justify;"><strong>எந்த துறைகளில் வேலை?</strong></p>
<p style="text-align: justify;">மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் தேசிய நலவாழ்வு இயக்கத்தின் கீழ் செயல்படும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி, சென்னை மாநகராட்சி உள்ளிட்ட துறைகளின் கீழ் இயங்கும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் இந்த செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.</p>
<p style="text-align: justify;">பணியிடங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன. இதற்காக அந்தந்த மாவட்ட மாவட்ட நலவாழ்வு அலுவலகங்களில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.</p>
<p style="text-align: justify;"><strong>எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை இடங்கள்?</strong></p>
<p style="text-align: justify;">தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மாவட்ட நலவாழ்வு சங்கங்களின் கீழ் செயல்படும் சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.</p>
<p style="text-align: justify;"><strong>மாவட்ட வாரியாக உள்ள காலியிடங்கள்:</strong></p>
<p style="text-align: justify;">சென்னை – 512<br />சேலம்–ஆத்தூர் – 231<br />திருச்சி – 205<br />திருவண்ணாமலை–செய்யாறு – 197<br />கோவை – 193<br />திருவள்ளூர்–பூந்தமல்லி – 178<br />கடலூர் – 172<br />ஈரோடு – 169<br />தஞ்சாவூர் – 166<br />திண்டுக்கல்–பழனி – 161<br />புதுக்கோட்டை–அறந்தாங்கி – 158<br />திருவாரூர் – 156<br />தருமபுரி – 152<br />மதுரை – 147<br />விருதுநகர்–சிவகாசி – 129<br />நாமக்கல் – 128<br />தூத்துக்குடி–கோவில்பட்டி – 126<br />சிவகங்கை – 120<br />தேனி – 119<br />கிருஷ்ணகிரி – 111<br />நீலகிரி – 111<br />திருநெல்வேலி – 101<br />கரூர் – 99<br />விழுப்புரம் – 94<br />தென்காசி – 76<br />வேலூர் – 75<br />கள்ளக்குறிச்சி – 74<br />நாகப்பட்டினம் – 70<br />ராமநாதபுரம் – 66<br />பரமக்குடி – 65<br />திருப்பத்தூர் – 65<br />ராணிப்பேட்டை – 64<br />அரியலூர் – 61<br />காஞ்சிபுரம் – 48<br />பெரம்பலூர் – 45<br />மயிலாடுதுறை – 41<br />நாகர்கோவில் – 39</p>
<p style="text-align: justify;"><strong>யார் விண்ணப்பிக்கலாம்?</strong></p>
<p style="text-align: justify;">இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் செவிலியர் பட்டயப்படிப்பு (GNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டப்படிப்பு (B.Sc Nursing) முடித்திருக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">மேலும், தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 25.9.2026 அன்று 50 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.</p>
<p style="text-align: justify;"><strong>ரூ.21 ஆயிரம் சம்பளம்</strong></p>
<p style="text-align: justify;">தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படும் செவிலியர்களுக்கு மாதம் ரூ.21,000 ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">இதனால், அரசு மருத்துவத்துறையில் பணிபுரிய விரும்பும் தகுதியான செவிலியர்களுக்கு இந்த அறிவிப்பு முக்கியமான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.</p>
<p style="text-align: justify;"><strong>நேர்முகத் தேர்வு... சான்றிதழ் சரிபார்ப்பு</strong></p>
<p style="text-align: justify;">விண்ணப்பங்கள் பெறப்பட்ட பின்னர் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.</p>
<p style="text-align: justify;">எனவே, விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, பதிவு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.</p>
<p style="text-align: justify;"><strong>விண்ணப்பிக்க செப்.25 கடைசி நாள்!</strong></p>
<p style="text-align: justify;">விண்ணப்பப் படிவத்தை தேசிய நலவாழ்வு இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான nhm.tn.gov.in என்ற முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து, சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதார அலுவலருக்கு செப்டம்பர் 25-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.</p>
<p style="text-align: justify;">அரசு மருத்துவமனையில் செவிலியர் பணிக்காக காத்திருப்போருக்கு... 4,724 காலியிடங்கள் கதவைத் திறந்துள்ள நிலையில், கடைசி நாளை தவறவிடாமல் விண்ணப்பிப்பது முக்கியம்!</p>
Source: Read Full Article