
<p>உதயநிதி ஸ்டாலின் கைது இனி பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசும் ஒவ்வொருவருக்கும் தக்க பாடம் என பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளனர். </p>
<h2><strong>சர்ச்சை பேச்சும்.. உதயநிதி கைதும்</strong></h2>
<p>தவெக அரசை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தஞ்சாவூரில் நேற்று திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். அப்போது தொண்டர்களில் சிலர் த்ரிஷா என கூச்சலிட்டனர். அதனைத் தொடர்ந்து உதயநிதி பேசிய கருத்து சர்ச்சையாக வெடித்தது. இதுதொடர்பாக உதயநிதிக்கு பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. பாஜக மூத்த தலைவர்களாக தமிழிசை சௌந்தரராஜன், மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம், தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். </p>
<p><iframe title="Vanni Arasu interview | ”பாஜக தயவில் தவெக அரசா? பதவி விலக கூட தயார்” வன்னி அரசு பரபரப்பு INTERVIEW" src="https://www.youtube.com/embed/kvOXPCC7e4g" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். தஞ்சாவூரில் இருந்து வருகை தந்த போலீசார் நீலாங்கரை இல்லத்தில் அவரை கைது செய்தனர். முன்னதாக உதயநிதி கைது நடவடிக்கைப் பற்றி தகவல் தெரிந்ததும் திமுக மூத்த தலைவர்கள், தொண்டர்கள் அங்கு குவிந்தனர். இதனால் அந்த இடமே பதற்றம் நிறைந்த இடமாக மாறியது. இப்படியான நிலையில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் அழைத்து செல்லப்பட்டார். இதனையடுத்து திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a>வினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். </p>
<h2><strong>தமிழக பாஜக வரவேற்பு</strong></h2>
<p>இந்த நிலையில் பாஜக தலைவர்கள் உதயநிதி ஸ்டாலின் கைதை வரவேற்றுள்ளனர். பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட பதிவில், “இன்று <a title="உதயநிதி ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/udhayanidhi-stalin" data-type="interlinkingkeywords">உதயநிதி ஸ்டாலின்</a> கைது செய்யப்பட்டதை நான் மனதார வரவேற்கிறேன். இது நிச்சயமாக தமிழக காவல்துறையின் ஒரு துணிச்சலான நடவடிக்கையாகும். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பெண்களின் கண்ணியத்தைப் பற்றிக் கவலைப்படாத மற்றவர்களுக்கு இந்தக் கைது ஒரு பாடமாக அமையும் என்று நான் நம்புகிறேன். இனி, பேச்சுரிமை என்பது பெண்களின் கண்ணியத்தை விட மேலானதா என்பதை நீதிமன்றங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.</p>
<p>வானதி சீனிவாசன் வெளியிட்ட பதிவில், “உதயநிதி <a title="ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/mk-stalin" data-type="interlinkingkeywords">ஸ்டாலின்</a> கைது இனி பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசும் ஒவ்வொருவருக்கும் தக்க பாடம். சட்டத்தின் மீதான நம்பிக்கை ஒவ்வொரு தருணங்களிலும் நாட்டு மக்களுக்கு நிரூபிக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது. அதேபோல், தமிழ்நாட்டுப் பெண்களை அவதூறாகப் பேசுபவர்கள் மற்றும் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்பவர்கள் மீது எவ்வித பாகுபாடின்றி இதேபோன்ற கடுமையான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் பட்சத்தில் முதல்வர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> அவர்களின் இந்த நடவடிக்கையை வரவேற்கலாம்” என தெரிவித்துள்ளார். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/essential-tips-for-oily-skin-health-tips-269923" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article