
<p>திருப்பூர் மாவட்டத்தில் திறந்தவெளிப் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளார். </p>
<h2><strong>வண்டி வண்டியாக கொட்டப்படும் கழிவுகள்</strong></h2>
<p>இதுதொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருப்பூர் மாவட்டம், அவினாசி தொகுதி அம்மாபாளையம் பகுதியில் அமைந்துள்ள பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழிகளில் திருப்பூர் மாநகராட்சியின் மண்டலம் 1 பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் டன் கணக்கிலான அழுகிய திடக்கழிவுகளை இரவு நேரத்தில் வண்டி வண்டியாக கொண்டுவந்து கொட்டுவது தெரிய வந்துள்ளது.</p>
<h2><strong>பாறைக்குழிகளில் கொட்டுவது சரியா?</strong></h2>
<p>திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன் படி கழிவுகளை தொடக்கத்திலேயே பிரித்தெடுத்தல், சுழற்சி முறை சுத்திகரிப்பு மற்றும் பரவலாக்கப்பட்ட நுண்ணிய உரமாக்கல் மையங்கள் அமைக்கப்பட வேண்டும். ஆனால், இத்தகைய விதிகளையும் சட்டங்களையும் தூக்கியெறிந்துவிட்டு, பாறைக்குழிகளில் கழிவுகளைக் கொட்டுவது சட்டத்திற்கு மாறானது. </p>
<p><iframe title="Vijaya Prabhakaran on CM Vijay | CM <a title=" data-type="interlinkingkeywords"><a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> பற்றி எல்லைமீறி பேசிய விஜய பிரபாகரன்! பிரேமலதா ரியாக்ஷன்" src="https://www.youtube.com/embed/HId4AKL95KA" width="1101" height="619" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2><strong>எச்சரிக்கை விடுத்தும் தொடரும் அவலம்</strong></h2>
<p>குப்பைகளைப் பின்னர் அழித்துவிடுவோம் என்று அதிகாரிகள் கூறும் காரணங்கள் மக்களின் உயிருடனும் நிலத்தடி நீர் வளத்துடனும் விளையாடும் ஆபத்தான போக்காகும். கடந்த 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் கூட, முதலிபாளையம், நல்லூர் போன்ற கைவிடப்பட்ட பாறைக்குழிகளிலும், திறந்தவெளி நிலங்களிலும் திருப்பூர் மாநகராட்சி சட்டத்திற்குப் புறம்பாக குப்பைகளைக் கொட்டியதைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் மிகக் கடுமையான எச்சரிக்கைகளையும் தடைகளையும் விதித்தன.</p>
<p>சட்டப்பூர்வமான நுண்ணிய கழிவு சுத்திகரிப்பு மையங்களை உருவாக்கத் தவறிய மாநகராட்சியின் தோல்வியைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் கண்டித்த பின்னரும், அதிலிருந்து எந்தப் பாடமும் கற்காமல் மீண்டும் அதே தவறைக் குடியிருப்புப் பகுதியான அம்மாபாளையத்தில் அரங்கேற்றுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இன்னொரு பக்கம் பயன்பாடற்ற பாறைக்குழிகளில் குப்பையைக் கொட்டி நிரப்புவதுதான் ஆகச்சிறந்த தீர்வு என்ற சட்டமன்ற உறுப்பினர் நாவல்பட்டு விஜி போன்ற அறிவியல் மேதாவிகள் அவிழ்த்துவிட்ட சிந்தனைகளை ஏற்று இந்த அரசு இவர்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை நீதிமன்றத் தடைகளையும் மீறி நேரடியாக அமல்படுத்தத் தொடங்கிவிட்டதோ என்ற கேள்வியும் எழுகிறது. </p>
<p>இந்நிலையில் மாநகராட்சியின் இந்தச் செயலைக் கண்டித்து போராடும் மக்களின் அறவழிப் போராட்டத்தைச் சந்தித்துத் தீர்வு காணத் துணிவில்லாத அரசு நிர்வாகம், காவல்துறையை நிறுத்தி மக்களின் உரிமைக் குரலை ஒடுக்க நினைப்பது எதேச்சதிகாரப் போக்காகும். அழுகியக் கழிவுகளிலிருந்து வெளியேறும் நச்சு நீர் மண்ணுக்குள் ஊடுருவி நிலத்தடி நீரை நச்சாக்குவதோடு, கொடிய நோய்களைப் பரப்பும் அபாயத்தையும் உருவாக்கியுள்ளது. கடந்த கால திமுக ஆட்சியில் தொடர்ந்த அதே அலட்சியமும் ஊழல் முறைகேடுகளும், தற்போதைய <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> ஆட்சியிலும் தொடர்வது ஆட்சி மாறினாலும் மக்களின் துயர் மாறவில்லை என்பதையே காட்டுகிறது. </p>
<p>எனவே, அம்மாபாளையம் பாறைக்குழிகளில் குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கையை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும். ஏற்கனவே கொட்டப்பட்டக் கழிவுகளை அறிவியல் பூர்வமாக அகற்றி அப்பகுதியைத் தூய்மைப்படுத்த வேண்டும். தவறும் நிலையில், பாதிக்கப்பட்ட அம்மாபாளையம் மக்களோடு இந்த அரசு நிர்வாகத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்” என தெரிவித்துள்ளார். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/simple-tips-to-make-carrot-pickle-know-more-details-here-272509" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article