
<p><strong>TN Govt GO:</strong> முக்கிய பிரமுகர்களுக்கான விழா ஏற்பாடுகளை செய்ய நிதி இன்றி தவிப்பதாக, அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழ்நாடு அரசு நிதியை விடுவித்துள்ளது. </p>
<h2>நிதி பற்றாக்குறை - தவிக்கும் அதிகாரிகள்</h2>
<p>தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “சமீப காலமாக மிக முக்கியப் பிரமுகர்கள் (VVIPs), முக்கியப் பிரமுகர்கள் (VIPs), குழுக்கள், உயர் அதிகாரிகள், அரசியலமைப்புச் சார்ந்த பதவிகளை வகிப்பவர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுக்குழுக்களின் வருகைகளின் எண்ணிக்கை, அளவு மற்றும் நடைமுறைகளின் சிக்கல் தன்மை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கான உணவு, தங்குமிடம், போக்குவரத்து மற்றும் பிற நெறிமுறை சார்ந்த ஏற்பாடுகளுக்கான செலவுகளை ஈடுகட்ட, தற்போதுள்ள நிதி வரம்புகள் போதுமானதாக இல்லை. இதன் விளைவாக, மாவட்ட ஆட்சியர்கள் பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் செலவிட வேண்டியுள்ளது. இதனால் கட்டணப் பட்டியல்களைத் தீர்ப்பதில் தாமதமும், ஒப்புதல்களைப் பெறுவதில் நடைமுறைச் சிக்கல்களும் ஏற்படுகின்றன. இது, செலவுகளைத் தீர்ப்பதில் தாமதத்தைத் தவிர்த்து, தெளிவான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற அரசின் நோக்கத்திற்கு முரணானதாகும்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/does-frequent-masturbation-harm-your-health-details-in-pics-270749" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<h2><strong>விழா ஏற்பாடுகளுக்காக நிதி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு:</strong></h2>
<p>குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகள், அரசியலமைப்புச் சார்ந்த பதவிகளை வகிப்பவர்கள், சர்வதேசப் பிரதிநிதிகள் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்கள் போன்ற முக்கியப் பிரமுகர்களின் வருகையின்போது மாவட்ட நிர்வாகங்கள் விரிவான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளது. இத்தகைய வருகைகள் மாநிலம் மற்றும் மாவட்டங்களின் கண்ணியத்தை உயர்த்துகின்றன; இருப்பினும், விருந்தோம்பல் மற்றும் நெறிமுறை சார்ந்த ஏற்பாடுகளுக்குக் கணிசமான செலவுகளும் இதில் அடங்கியுள்ளன. தற்போதைய நடைமுறையில், இத்தகைய செலவுகளை ஈடுகட்டுவதற்கு மட்டும் தனியாக நிதி ஒதுக்கீடு ஏதுமில்லை. எனவே, முதலமைச்சர் மற்றும் மாநில அரசின் அமைச்சர்கள் நீங்கலாக, முக்கிய பிரமுகர்களின் வருகைகளின் சராசரி எண்ணிக்கை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில், 2026-27 நிதியாண்டிற்காக 6 கோடியே 85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/HxbrDqohHag?si=ksTIU01KfCZvOJEe" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2><strong>மாவட்ட வாரியான நிதி விவரங்கள்</strong></h2>
<p>கோவை, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், நீலகிரி, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி, ஈரோடு, சேலம், காஞ்சிபுரம், தஞ்சாவூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், தர்மபுரி கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவாரூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.</p>
<h2><strong>அதிகாரிகளின் குமுறலும்.. அரசின் அதிரடி அறிவிப்பும்..!</strong></h2>
<p>பொதுவாக அரசு நிகழ்ச்சிகளுக்கான செலவுகள் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்பித்தால், வாரங்கள் அல்லது மாதங்கள் கழித்தே அந்த பணம் விடுவிக்கப்படும். ஆனால், அதுநாள் வரை விழாவிற்கு வாடகைக்கு பொருள் கொடுத்தவர்கள்,சிற்றுண்டி விநியோகஸ்தர்கள் மற்றும் பந்தல் அமைத்தவர்கள் போன்றோரை காக்க வைக்க முடியாது. இதனால் சொந்த பணத்தை போட்டு செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் அதிகாரிகள் இருந்தனர். சிலர் சிறு வியாபாரிகளை மிரட்டி மேற்கூறிய பணிகளை பணமே கொடுக்காமல் செய்து வருவதகாவும் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் சிலர் கடந்த மாதம் பொதுவெளியிலேயே பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது.</p>
<p><a title="TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்" href="https://tamil.abplive.com/news/politics/cm-vijay-plan-to-bring-resolution-against-delimitation-bill-in-assembly-to-check-dmk-admk-stand-tn-politics-270865" target="_self">இதையும் படியுங்கள்: TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்</a></p>
<p>இத்தகைய சிக்கலை தவிர்க்க, மாவட்ட ஆட்சியாளர் பொறுப்பில் முன்கூட்டியே குறிப்பிட்ட நிதியை ஒதுக்கிவிட்டால், தேவைக்கு ஏற்ப அவர்கள் செலவு செய்துகொள்ளலாமே என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில் தான், மிக முக்கிய பிரமுகர்கள் (VVIPs), முக்கிய பிரமுகர்கள் (முதலமைச்சர் மற்றும் மாநில அமைச்சர்களைத் தவிர்த்து) மற்றும் இந்திய அரசு, தமிழ்நாடு அரசின் மூத்த அதிகாரிகளுக்காக செய்யப்பட்ட தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் போன்ற நெறிமுறை ஏற்பாடுகள் தொடர்பான உண்மையான செலவினங்களின் அடிப்படையில், தேவைக்கேற்ப நிதியை விடுவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு ரூ.6.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது</p>
Source: Read Full Article