
<p>கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்களை அந்த மாநில வனத்துறையினர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>இந்த சம்பவத்தில் கர்நாடக அரசுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது?</p>
<h2><strong>மனிதநேயமற்ற கொடுஞ்செயல்:</strong></h2>
<p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்குட்பட்ட அனூர் வனப்பகுதியில் 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையினரால் சிறிதும் ஈவு இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. வழிதவறிய தங்களின் மாடுகளை தேடி வந்தவர்களை வேட்டையாட வந்தவர்கள் என்றுகூறி கர்நாடக வனத்துறை சுட்டுக்கொன்றுள்ளது சிறிதும் மனிதநேயமற்ற கொடுஞ்செயலாகும்.</p>
<h2><strong>அதிகாரம் கொடுத்தது யார்?</strong></h2>
<p>வழிதவறிய மாடுகளை தேடி வந்த தமிழர்களை, மானை வேட்டையாட வந்தவர்கள் என்று கர்நாடக வனத்துறை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறுகிறது? அப்படியே வேட்டையாட வந்தவர்களாக இருந்தாலும் அவர்களை சுட்டுக்கொல்ல கர்நாடக வனத்துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது? எத்தகைய குற்றம் புரிந்திருந்தாலும், அவர்களை கைது செய்து சட்டப்படி தண்டனைப்பெற்று தருவதை விடுத்து, எந்த விசாரணையும் இன்றி சுட்டுக்கொன்றது ஏன்? </p>
<p>சுட்டார்கள் என்றால் சுடப்பட்ட மான் எங்கே? மானை சுட்டவர்களுக்கு மரண தண்டனை? மனிதர்களை சுட்டவர்களுக்கு என்ன தண்டனை? மானின் உயிரை மலிவாகிவிட்டதா சகமனிதனின் உயிர்? மானின் உயிருக்கு இருக்கும் மதிப்பு மானத்தமிழன் உயிருக்கு இல்லையா? மனிதநேயம் பேசும் நியாயவான்கள், மனித உரிமை ஆர்வலர்கள் யாருமே இதைப்பற்றி பேசாமல் கடந்து செல்வது சரிதானா? </p>
<h2><strong>தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு எந்த நாதி?</strong></h2>
<p>விலங்குகளை வேட்டையாடினால்கூட கேட்பதற்கு வனத்துறையும், வனவிலங்கு ஆர்வலர்கள் இருக்கிறார்கள்? தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு எந்த நாதி இருக்கிறது? வனவிலங்குகளை வேட்டையாடுவது கொடுங்குற்றம் என்றால் தமிழர்களை சுட்டுக்கொல்வது புனித சட்டமா?</p>
<p>தமிழர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றால், எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படை சுட்டுக்கொல்கிறது.<br />தமிழர்கள் கூலி வேலைக்கு சென்றால் செம்மரம் கடத்த வந்ததாக ஆந்திர காவல்துறை சுட்டுக்கொன்றது. தற்போது மாடுகளை தேடி சென்ற தமிழர்களை வேட்டையாட வந்ததாக கர்நாடக வனத்துறை சுட்டுக்கொன்றுள்ளது. </p>
<h2>இனவெறி:</h2>
<p>இலங்கை ராணுவம்தான் இனவெறியுடன் தமிழர்களை கொல்கிறது என்றால் ஆந்திர, கர்நாடக வனத்துறை தமிழர்களை மட்டும் குறிவைத்து சுட்டுக்கொல்வதற்கு பெயரென்ன? அண்டை நாடான இலங்கையிடம் இருக்கும் அதே இனவெறியும், வெறுப்பும் அண்டை மாநிலங்களிடமும் இருந்தால் ஒரு நாட்டிற்குள் நாம் இருப்பதற்கான அர்த்தம் என்ன? </p>
<p>சொந்த நாட்டு குடிமக்களை சகோதர மாநில வனத்துறையினர் எவ்வித விசாரணையும் இன்றி சிறிதும் மனச்சான்றின்றி, சுட்டுக் கொல்வார்கள் என்றால், இதில் எங்கே இருக்கிறது தேச ஒற்றுமை? எங்கே இருக்கிறது இந்திய ஒருமைப்பாடு? தேசபக்தி குறித்து பாடமெடுத்தவர்கள் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? </p>
<h2>வெட்கக்கேடு:</h2>
<p>திராவிடம் பேசும் திருவாளர்கள் இதற்கு வாய்த்திறவாமல் அமைதி காப்பது ஏன்? இந்திய ஒன்றியத்தை பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசும் இதுவரை கர்நாடக அரசை கண்டிக்காது வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது. பாகிஸ்தான் கடற்படையால் ஒரு குஜராத் மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டாலும் பதறித்துடிக்கும் பாஜக அரசு, கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகும் எந்த சலனமும் இன்றி அமைதியாக இருப்பது ஏன்? இதனை பிரதமர் மோடியோ, காங்கிரசு மூத்த தலைவர் ராகுல்காந்தியோ இதுவரை கண்டிக்காதது ஏன்? தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா? தமிழர்களுக்கான ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா?<br />பீகார் மாநிலத்தவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று பரவிய வதந்திக்கே அம்மாநில சட்டமன்றம் அதிர்ந்தது. ஆய்வுக்குழுவை அனுப்பி பீகாரிகள் பாதுகாப்பை உறுதி செய்தது. அந்த அக்கறையில் அணுவளவாவது தவெக அரசிற்கு இருக்கிறதா? </p>
<h2><strong>தமிழக அரசு ஏற்குமா?</strong></h2>
<p>3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு தவெக அரசு இதுவரை ஆற்றிய எதிர்வினை என்ன? தமிழர்கள் மானை வேட்டையாட வந்தார்கள் என்று கர்நாடக அரசு பழிபோடுவதை தமிழக அரசு ஏற்கிறதா? எதிர்க்கிறதா? இதில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? தமிழ்நாடு வனத்துறை அமைச்சர், தமிழ்நாடு முதல்வர் ஆகியோரின் கருத்து என்ன? அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களின் குடும்பத்திற்கு அரசு வழங்கப்போகும் நிதியுதவி என்ன? அவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில அரசு வேலை வழங்குமா?</p>
<p>காவிரி சிக்கல் போல, இதிலும் கர்நாடக காங்கிரசு அரசை கண்டிக்க தவெக அரசுக்கு துணிவில்லையா? ஆட்சிக்கு ஆபத்துவந்துவிடுமோ என்று அஞ்சுகிறதா? இதுதான் தமிழர் உரிமையை தவெக அரசு காக்கும் முறையா? கர்நாடகாவை சேர்ந்தவரை தமிழ்நாட்டிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியாக <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> அரசு நியமித்ததறகு பரிசுதான், 3 அப்பாவி தமிழர்களை கர்நாடக வனத்துறை சுட்டுக்கொன்றுள்ளதா? <br />இன்னும் எத்தனை எத்தனை துயரங்களைத்தான் தமிழினம் தாங்குவது? பெருங்கொடுமை!</p>
<h2><strong>கொலை வழக்கு வேண்டும்:</strong></h2>
<p>கர்நாடக வனத்துறையால் 3 அப்பாவி தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு உடனடியாக வனத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக்குழுவை அனுப்புவதுடன், கர்நாடக வனத்துறை மீது கொலை வழக்கு பதிந்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.</p>
<p>இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/education/which-vitamin-deficiency-causes-cramps-in-hands-and-feet-271334" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<p> </p>
Source: Read Full Article