
<h2>பொதுமக்களின் கோரிக்கைக்கு தீர்வு</h2>
<p>தமிழகத்தில் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> அரசு அமைந்துள்ள நிலையில், பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் தங்களது கோரிக்கை மற்றும் புகார் தொடர்பாக தினந்தோறும் பல ஆயிரம் பேர் தலைமைசெயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்து வருகிறார்கள். மேலும் அந்த அந்த மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளிடம் புகார்களை கூறி வருகிறார்கள்.</p>
<p>இந்த நிலையில் அந்த புகார்களை உடனடியாக சரிபார்த்து தீர்வு வழங்க வேண்டும் என தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரிட்டுள்ளது. அந்த வகையில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மற்றும் குறைதீர் கோரிக்கைகள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க அனைத்து அரசுத் துறைகளுக்கும் தமிழக அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. </p>
<h2>30 நாட்களுக்குள் தீர்வு</h2>
<p>இதன்படி, ஒவ்வொரு மனுவும் பெறப்பட்ட நாளிலிருந்து அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக ஆய்வு செய்து, தேவையான தகவல்களை ஒருங்கிணைத்து, விதிமுறைகளுக்கு ஏற்ப தீர்வு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏதேனும் காரணங்களால் அந்த கோரிக்கை அல்லது புகாருக்கு உடனடியாக தீர்வு வழங்க இயலாத சூழல் ஏற்பட்டால், அதற்கான காரணங்களை மனுதாரருக்கு தெளிவாக அதிகாரிகள் தெரிவிக்கவும், மனுவின் தற்போதைய நிலையை முறையாக புதுப்பித்து வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>
<h2>வெளிப்படைத்தன்மை முக்கியம்</h2>
<p>அதேநேரம் தேவையின்றி மனுக்களை நிலுவையில் வைப்பது, அலட்சியமாக கையாளுவது அல்லது காலதாமதம் ஏற்படுத்துவது போன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது. மனுக்கள் தொடர்பான நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தீர்வு கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து துறை செயலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p>
<p>இந்த நடைமுறையால் பொதுமக்களின் குறைகள் விரைவாக தீர்க்கப்படுவதுடன், அரசுத் துறைகளின் செயல்திறன் மேம்படும் என்றும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு அதிகரிக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு விரைவான சேவை வழங்குவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/entertainment/12-movies-and-web-series-ready-for-ott-viewing-269674" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article