
<h2>சமையலும் காய்கறிகளும்</h2>
<p>சமையல் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது தக்காளி மற்றும் வெங்காயம், அந்த வகையில் ரசம் முதல் பிரியாணி என எது சமைப்பதாக இருந்தாலும் தக்காளி மற்றும் வெங்காயம் முக்கிய தேவையாக இருக்கும். எனவே காய்கறி சந்தையில் எந்த காய்கறிகளை மக்கள் முக்கியத்துவம் கொடுத்து வாங்குகிறார்களோ இல்லையோ கட்டாயம் தக்காளி மற்றும் வெங்காயத்தை மக்கள் பை நிறைய வாங்கி செல்வார்கள். அதற்கு ஏற்ப தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையும் கடந்த சில மாதங்களாக குறைந்து இருந்தது. ஒரு கிலோ 15 முதல் 25 ரூபாய்க்குள் தக்காளி மற்றும் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது.</p>
<h2>உயரும் வெங்காயம் விலை</h2>
<p>ஆனால் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதே நேரம் தக்காளியின் விலையானது ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 65 ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் 100 ரூபாய்க்கு 5 கிலோ வெங்காயத்தை வாங்கி சென்ற மக்கள் தற்போது 100 ரூபாய்க்கு ஒன்றரை கிலோ வெங்காயத்தை மட்டும் வாங்கும் நிலையானது உருவாகியுள்ளது. மேலும் மற்ற மாவட்டங்களில் வெங்காயத்தின் விலையானது கிலோ 80 ரூபாயை தொட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் வரும் நாட்களில் வெங்காயத்தின் விலையானது மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். </p>
<h2>ரயிலில் வரும் வெங்காயம்</h2>
<p>இதனையடுத்து வெங்காயத்தை பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்யும் வகையில், மத்திய அரசு களத்தில் இறங்கியுள்ளது. ஓராண்டுக்கு முன்பு இருந்ததை விட வெங்காயத்தின் விலையானது அதிகரித்து விட்டது. சராசரி மொத்த விலை 68 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிலையில், வெங்காயம் விலையை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு தனது மொத்த கையிருப்பில் உள்ள வெங்காயத்தை ரெயில் மூலம் சந்தைக்கு அனுப்பியுள்ளது. அந்த வகையில் சிறப்பு ரயில் மூலம் வெங்காயத்தை பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பவுள்ளது. இதற்காக கடந்த ஆண்டு 12 ஆயிரம் டன் வெங்காயமும், கடந்த நிதியாண்டில் 88 ஆயிரம் டன் வெங்காயமும் முக்கிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் வெங்காயத்தின் விலையானது உயர தொடங்கியுள்ளதால்,</p>
<h2> ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய்</h2>
<p>தற்போது மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கையிருப்பில் உள்ள 1 லட்சத்து 21 ஆயிரம் டன் வெங்காயத்தில் இருந்து கண்டா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மூலம் வெங்காயம் ஏற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வெங்காயம் அதிகமாக பயன்படுத்தப்படும் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களுக்கும் மற்ற மாநிலங்களில் உள்ள பெரு நகரங்களான டெல்லி, எர்ணாகுளம், கவுகாத்தி ஆகிய 5 இடங்களுக்கு வெங்காயம் அனுப்பி வைக்கப்படுகிறது. நாளைய தினம் வந்திறங்கும் என மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் நித்தி காரே தெரிவித்துள்ளார். எனவே மத்திய அரசு ரயில் மூலம் அனுப்பியுள்ள வெங்காயத்தின் வரத்து மூலம் இனி ஒரு கிலோ வெங்காயம் 30 முதல் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.</p>
<p> </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/what-are-the-mileage-and-emi-plan-for-the-maruti-suzuki-dzire-272282" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article