
<p>தவெக அமைச்சர்கள் ஒவ்வொரு பணிகளுக்கும் பணம் வாங்குகிறார்கள் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். மிக விரைவில் இதற்கான பட்டியல் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். </p>
<h2><strong>ஊழலை தடுக்க போராடும் தவெக அரசு</strong></h2>
<p>தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் லஞ்சம், ஊழல் இல்லாத அரசையும், சமூகத்தையும் கட்டமைக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. பெரும்பாலான அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்கள், லஞ்சம் வாங்குவது போன்றவை அடியோடு குறைந்து விட்டது. எனினும் முற்றிலுமாக பிரச்னை சரியாகவில்லை. இந்த விஷயத்தில் அரசின் முடிவுக்கு அதிகாரிகளே ஒத்துப்போகவில்லை என சொல்லப்படுகிறது. தவெக அரசின் இந்த முயற்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. </p>
<p>அதேசமயம் அமைச்சர்கள் தொடங்கி கட்சியின் உள்ளூர் பிரமுகர்கள் வரை பணம் பெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குற்றம் நிரூபிக்கப்படும் நபர்கள் மீது சட்டப்படியும், கட்சி ரீதியாகவும் தவெக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. </p>
<h2><strong>பணம் வாங்கும் அமைச்சர்கள் லிஸ்ட்</strong></h2>
<p>இப்படியான நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களும் தங்கள் வேலையைக் காட்ட தொடங்கி விட்டனர், அதாவது அவர்கள் பணம் வாங்கத் தொடங்கிவிட்டனர். அவர்கள் எங்கிருந்து, எப்படிப் பணம் வாங்குகிறார்கள் என்பதற்கான முழுப் பட்டியலும் எங்களிடம் உள்ளது. அனைத்து விவரங்களையும் மிக விரைவில் வெளியிடுவோம். <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> அரசின் இந்த 100 நாட்களை மக்களுக்கு வேதனையான நாட்களாக நான் கருதுகிறேன். ஊழல் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. </p>
<h2><strong>கர்நாடகா முதலமைச்சருக்கு கடும் கண்டனம்</strong></h2>
<p>இதனிடையே கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கண்டனம் தெரிவித்த தமிழக முதலமைச்சர் விஜயை விமர்சிக்கும் வகையில் அம்மாநில முதலமைச்சர் டி.கே.ஷிவக்குமார் பேசியிருந்தார். அதாவது, “ந்தவொரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது. மாநிலங்களுக்குத் தங்களின் சொந்தப் பிரச்சினைகள் உள்ளன. நமது மாநிலத்தை எப்படிப் பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும் என்பதையும் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நமது மாநிலத்தின் புனிதத்தை நாம் பாதுகாக்க வேண்டும். அவர்கள் தங்கள் வேலையைச் செய்யட்டும்; நாங்கள் எங்கள் வேலையைச் செய்ய வேண்டும்” என கூறியிருந்தார். </p>
<p>இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “ஒரு முதலமைச்சர் அத்தகைய அதிகாரப் பதவியில் இருந்தாலும் ஒருவரின் உயிரைப் பறிக்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை. அது தமிழ்நாடு மக்கள் மட்டுமல்ல கர்நாடகா மக்கள் பாதிக்கப்பட்டாலும் தவறு தான். இந்த விவகாரத்தை தமிழக பாஜக சார்பாக இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என தெரிவித்தார். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/benefits-of-eating-green-gram-during-the-rainy-season-271601" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article