
<p>Gen Z தலைமுறையினர் எதை, என்ன மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது புரியவில்லை., பிரதமரே ரீல்ஸ் போடும் அளவுக்கு ஒரு புரட்சி நடந்துள்ளது - திருமாவளவன் பேச்சு.</p>
<p><strong>ஜனநாயகம் கற்போம்</strong></p>
<p>மதுரை ஒத்தக்கடை வேளாண் கல்லூரியில் நடைபெற்ற "ஜனநாயகம் கற்போம்" என்ற மாணவர் பாராளுமன்ற கருத்தரங்க நிகழ்வில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் பேசியபோது...," Gen Z தலைமுறையினர் எதை, என்ன மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது புரியவில்லை. தலைவர் என ஒருவர் இல்லாமல் யாரும் அழைக்காமல் தன்னெழுச்சியாக லட்சக்கணக்கில் கூடுகிறார்கள். ஜல்லிக்கட்டு புரட்சிக்கு ஒன்றிய அரசே பணிந்தது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு புரட்சியை போல, தலைநகர் டெல்லியில் வெறும் சமூக வலைதளத்தில் உருவான ஒரு பேனர் மூலம் மாணவர்கள் திரண்டார்கள்.</p>
<p><strong>நீதிபதி தவறுதலாக சொன்ன ஒரு வார்த்தையில் துவங்கிய கரப்பான் பூச்சி இயக்கம்</strong>, டெல்லியை திணற வைத்தது. இந்திய அரசே பணிந்தது. ஒரு கட்சியால், அமைப்பால் செய்ய முடியாத ஒன்றை மாணவர்கள் புரட்சி செய்து முடித்திருக்கிறது. மாநில கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து தொடர் போராட்டம் நடத்தியிருந்தாலும், பிரதமர் பணிந்திருக்க மாட்டார். பிரதமரே ரீல்ஸ் போடும் அளவுக்கு ஒரு புரட்சி நடந்துள்ளது. இவர்கள் எத்தகைய உளவியலை கொண்டிருக்கிறார்கள் என்று உணர முடியாத அளவுக்கு மாறி இருக்கிறது. தந்தைக்கும் - பிள்ளைக்கும் பெரும் இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. இந்த தலைமுறையின் சிந்தனை போக்கு, ஆளுமை வளர்ச்சியடைந்திருக்கிறது. இந்த தலைமுறை இடைவெளியை இட்டு நிரப்புகிற பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது. கால இடைவெளி இருக்கலாம், சிந்தனை இடைவெளி இருக்க கூடாது என்றார் </p>
<p><strong>இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் மாணவி ஒருவர், "மக்கள் கொள்கையை பார்க்காமல் ஆட்சியாளர்களை தேர்வு செய்வது சரியா?" என கேள்வியெழுப்பினார்</strong></p>
<p>அதற்கு பதிலளித்த திருமாவளவன்,<br />"இதுவும் ஜனநாயகத்தின் அங்கம் தான். கொள்கை, கோட்பாடுகளை பார்த்து தான் ஓட்டு போட வேண்டும் என்பது ஜனநாயகத்தில் எடுபடாது. மக்கள் ஏதோ ஒரு கோணத்தில் தங்கள் ஆட்சியாளரை தேர்வு செய்கிறார்கள். அதை நாம் எதிர்க்க முடியாது. கொள்கை, கோட்பாடுள்ள, மக்களுக்காக உழைத்தவர்களை ஆட்சியில் அமர வைத்தால் மகிழ்ச்சி. ஆனால், புதிதாக வரும் ஒருவரை மக்கள் தங்களுக்கு நல்லது செய்வார்கள் என்று நம்பினால் அதையும் நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். இதுவும் ஜனநாயகம் தான்" என்றார்.</p>
<p><strong>படித்தவர்கள் அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது</strong></p>
<p>அரசியலில் நேர்மை நிச்சயம் சாத்தியம் தான். நாம் அந்த நேர்மையில் எவ்வளவு உறுதியுடன் இருக்கிறோம் என்பதே முக்கியம். அந்த உறுதி இருந்தால் எந்த நெருக்கடியிலும் நேர்மையாக வாழலாம். இப்போது அரசியலுக்கு வருபவர்களிடம் service mindset குறைவாக உள்ளது. தொண்டுள்ளம் என்பது மிக முக்கியமானது. அது இருந்தால் யாரும் அரசியலில் ஈடுபடலாம். படித்தவர்கள் அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்கள் படிக்கும் போதே அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்கு தொண்டு செய்வதற்கு தான் அரசியலுக்கு வருகிறேன் என்ற புரிதலோடு படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.</p>
Source: Read Full Article