
<h2><strong>ஆண் குழந்தை இறந்த நிலையில் கண்டெடுப்பு</strong></h2>
<p>கன்னியாகுமரி நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் பின்புறம் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் தொப்புள் கொடியுடன் கூடிய ஆண் குழந்தை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக வடசேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தவலறிந்த வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆண் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.</p>
<p>இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் தவறான உறவில் பிறந்ததால் குழந்தையை கொலை செய்து வீசி இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. எனவே இது குறித்து இன்ஸ்பெக்டர் மோகன் ஐயர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர்.</p>
<h2><strong>" எனக்கு எதுவும் தெரியாது "</strong></h2>
<p>தனியார் மருத்துவமனையில் , யாராவது குழந்தை பெற்று , அந்த குழந்தையை தோப்பில் வீசி இருக்கலாமா ? என்ற சந்தேகத்தின் பேரில் விசாரித்துள்ளனர். இதில் அந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்த தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியை சேர்ந்த நர்ஸ் ராமலெட்சுமி ( வயது 22 ) ஒருவர் ஏற்கனவே வயிறு வலிப்பதாக கூறி வந்துள்ளார். மேலும், அவர் சரி வர பணிக்கு வரவில்லை என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.</p>
<p>எனவே இது குறித்து அந்த சம்மந்தப்பட்ட நர்சிடம் போலீசார் விசாரணை நடத்த சென்றுள்ளனர். இதில் அவர் உடல் நல குறைவால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் அந்த நர்சிடம் விசாரிக்கச் சென்றுள்ளனர்.</p>
<p>முதலில், "தனக்கு எதுவும் தெரியாது" என்றவர், பின்னர் போலிஸ் விசாரணையை தீவிரப்படுத்தியதால் "குழந்தை தனக்கு பிறந்தது தான்" என்பதை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.</p>
<h2><strong>காதலனுடன் தனிமையில் உறவு</strong></h2>
<p>அந்த நர்ஸ் திருமணமாகாதவர் எனவும், அவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், அவரது காதலனுடன் நெருக்கமான உறவில் இருந்ததால் அந்த நர்ஸ் கருத்தரித்துள்ளார். பின்னர் , பிரசவத்தின் போது குழந்தை இறந்து பிறந்ததால் பயத்தில் வீசியதாக தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகே குழந்தை கொல்லப்பட்டதா ? அல்லது இறந்து பிறந்ததா ? என்பது தெரிய வரும் என போலீசார் கூறியுள்ளனர்.</p>
Source: Read Full Article