
<p style="text-align: left;">தூத்துக்குடி மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது அதே கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி பாலியல் புகார் தொடர்பாக முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p style="text-align: left;">இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:</p>
<p style="text-align: left;">தூத்துக்குடி மாவட்ட தவெக பெண் நிர்வாகி தற்போது அளித்துள்ள புகாரையும், ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தவெக பெண் நிர்வாகி அளித்திருந்த புகாரையும் உடனடியாக விசாரித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கட்சி பாகுபாடின்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.</p>
<p style="text-align: left;">தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக பெண் நிர்வாகி ஒருவர், அதே கட்சியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் மற்றும் சில நிர்வாகிகள் மீது காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்திருந்த நிலையில், அந்தப் புகாரின் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தற்போது தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மீண்டும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும், இது தொடர்பாக அம்மாவட்டப் பொறுப்பு அமைச்சரிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p>
<p style="text-align: left;">இதற்கு முன்பாகவும் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தவெக பெண் நிர்வாகி ஒருவருக்கு பாலியல் தொல்லை மற்றும் பாலியல் வன்கொடுமை அளிக்கப்பட்டதாகப் புகார் எழுந்த நிலையில், அந்தப் புகாரில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மீதும் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகி காவல்துறையில் புகார் அளித்திருந்த போதிலும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததே, மேலும் மேலும் தவெகவினரின் அத்துமீறல்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p>
<p style="text-align: left;">ஒரு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், அதே மாவட்டத்தில் மீண்டும் ஒரு பெண் நிர்வாகி தான் சார்ந்துள்ள கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார் அளித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. </p>
<p style="text-align: left;">ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகிகளே தங்களுக்குப் பாதுகாப்பில்லை என்றும், தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் காவல்துறையிடம் புகார் அளிக்கும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை இருப்பதாகக் கூறப்படும் நிலையில், “பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் கிடையாது” என முதலமைச்சர் ஜோசப் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பது வேடிக்கையானது.</p>
<p style="text-align: left;">எனவே, தூத்துக்குடி மாவட்ட தவெக பெண் நிர்வாகி தற்போது அளித்துள்ள புகாரையும், ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் பகுதியில் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> பெண் நிர்வாகி அளித்திருந்த புகாரையும் உடனடியாக விசாரித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கட்சி பாகுபாடின்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>
Source: Read Full Article