
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: திருச்சியிலிருந்து மயிலாடுதுறை சென்ற ரெயிலில் பெண் பயணிகளிடம் ஆபாச சைகை காட்டிய உத்தரபிரதேச வாலிபருக்கு காப்பு மாட்டினர் கும்பகோணம் ரெயில்வே போலீசார்.</p>
<p style="text-align: justify;">திருச்சியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பயணிகள் ரெயிலில் பெண் பயணிகளிடம் இந்தியில் ஆபாசமாக பேசி, ஆபாச சைகைகள் செய்ததாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த 35 வயது வாலிபரை கும்பகோணம் ரெயில்வே போலீசார் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.</p>
<p style="text-align: justify;">திருச்சியில் இருந்து தினமும் காலை 6.05 மணிக்கு மயிலாடுதுறை நோக்கி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் தினமும் ஏராளமான பயணிகள் பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.</p>
<p style="text-align: justify;"><strong>பெண் பயணிகளை நோக்கி ஆபாச சைகை</strong> </p>
<p style="text-align: justify;">இந்நிலையில், சம்பவத்தன்று இந்த ரெயிலில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பயணம் செய்துள்ளார். ரெயில் சென்று கொண்டிருந்தபோது, அவர் அருகில் இருந்த பெண் பயணிகளை நோக்கி இந்தியில் ஆபாசமான வார்த்தைகளை பேசியதாகவும், தொடர்ந்து ஆபாச சைகைகள் செய்ததாகவும் கூறப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">இதனால் அதிர்ச்சியடைந்த பெண் பயணிகள், அந்த வாலிபரின் செயல்பாடுகள் குறித்து கும்பகோணம் ரெயில்வே போலீசாருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர்.</p>
<p style="text-align: justify;"><strong>ரெயிலில் ஏறி போலீசார் விசாரணை</strong></p>
<p style="text-align: justify;">இதையடுத்து கும்பகோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் ரெயில்வே பாதுகாப்புப்படை காவலர் இளையராஜா ஆகியோர் சம்பந்தப்பட்ட ரெயிலில் ஏறினர். பின்னர், பெண் பயணிகள் தெரிவித்த அடையாளங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.</p>
<p style="text-align: justify;">விசாரணையில், அவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீ சவான் என்பவரின் மகன் ராஜேஷ் யாம் (35) என்பது தெரியவந்தது. மேலும், ரெயிலில் பெண் பயணிகள் முன்னிலையில் ஆபாச வார்த்தைகளை பேசியதுடன், ஆபாச சைகைகள் செய்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">இதையடுத்து கும்பகோணம் ரெயில்வே போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் யாமை கைது செய்தனர்.</p>
<p style="text-align: justify;"><strong>புதுக்கோட்டை சிறையில் அடைப்பு</strong></p>
<p style="text-align: justify;">கைது செய்யப்பட்ட ராஜேஷ் யாமை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.</p>
<p style="text-align: justify;">பொதுமக்கள் அதிகளவில் பயணம் செய்யும் ரெயில்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரெயில்வே போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>
<p style="text-align: justify;">இந்த நிலையில், பெண் பயணிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படும் நபர் மீது, சக பயணிகள் உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் போலீசார் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">ரெயில் பயணத்தின்போது பெண்கள் உள்ளிட்ட பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் செயல்பட்டால், தயக்கமின்றி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ரெயில் பயணிகள் தரப்பில் கூறுகையில், புகார் தெரிவித்த உடனேயே கும்பகோணத்தில் ரயிலில் ஏறி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு அதிரடியாக நடவடிக்கை எடுத்தது ரெயில் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை இது போன்ற நடவடிக்கைகள் வலுவாக உறுதிப்படுத்துகிறது. நடவடிக்கை எடுத்த ரெயில்வே போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர். </p>
Source: Read Full Article