
<p>தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்த திமுக-விற்கு <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>யின் தவெக பேரதிர்ச்சி அளித்தது. திமுக-வின் தோல்வியைக் காட்டிலும் கொளத்தூரில் அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தது பெரும் வேதனையை திமுக-வினருக்கு ஏற்படுத்தியது.</p>
<h2><strong>நல்ல சாவே வராது:</strong></h2>
<p>இந்த தேர்தல் தோல்விக்கு பிறகு திமுக-வின் முக்கிய தலைவர்கள், திமுக ஆதரவாளர்கள் பல இடங்களில் பொதுவெளியில் பொதுமக்களை வஞ்சிக்கும் விதமாக தொடர்ந்து பேசி வருகின்றனர். இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.</p>
<p>இந்த சூழலில், சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி, சைதாப்பேட்டை தொகுதியில் அவர் செய்தது போல யாரும் செய்தது இல்லை. கலைஞரே முதலமைச்சராக இருந்தார். அவர் கூட அந்த டைம் பெரிய மருத்துவமனை கொண்டு வர முடியவில்லை.</p>
<p>இங்கே பக்கத்தில் ஆலந்தூரில் இருப்பவர்களுக்கு பெரிய வசதியாக இருந்தது. அந்த மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள், அவங்க சொந்தக்காரர்கள் வாக்களித்து இருந்தாலே ஜெயிச்சுருப்பாரு. அவனுங்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது என்றார்.</p>
<h2><strong>குவியும் கண்டனங்கள்:</strong></h2>
<p>கருணாநிதி காலம் முதலே திமுக-வில் முக்கிய தலைவராக திகழும் ஆர்எஸ்பாரதி இப்படி பேசியிருப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர் ஏற்கனவே பல முறை இவ்வாறு பேசி சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். திமுக-வின் தோல்விக்கு பிறகு முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொளத்தூர் தொகுதி மக்களை கேடு கெட்ட மக்கள் என்று விமர்சித்துப் பேசியிருந்தார். </p>
<p>திமுக ஆதரவாளர் நடிகர் சத்யராஜ் மனசாட்சி இருக்கிறதா? என்று கொளத்தூர் மக்களை விமர்சித்துப் பேசியிருந்தார். திமுக ஆதரவாளர்கள் பலரும் தொடர்ந்து இதுபோன்று வாக்காளர்களை விமர்சித்துப் பேசி வருகின்றனர். தற்போது சைதாப்பேட்டையில் மா.சுப்ரமணியன் தோல்வி அடைந்ததற்கு அந்த தொகுதி மக்களை ஆர்எஸ் பாரதி நல்ல சாவே வராது என்று மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்துப் பேசியுள்ளார்.</p>
<h2><strong>கட்டுப்படுத்துவாரா மு.க.ஸ்டாலின்?</strong></h2>
<p>இதேமக்கள்தான் கடந்த தேர்தலில் திமுக-வை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தனர், தற்போது தோல்வி அடையச் செய்யவும் அதை ஏற்பதில் என்ன சிரமம்? என்று திமுக-வினருக்கு பலரும் கேள்விக்கணைகளைத் தொடுத்து வருகின்றனர். இதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் ஏதேனும் குற்றச்சம்பவங்கள், மின்தடை நிகழ்ந்தால் அதுதொடர்பான வீடியோக்கள், பதிவுகளில் திமுக ஆதரவாளர்கள் பலரும் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a>-விற்கு ஓட்டுப்போட்டதால் அனுபவியுங்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.</p>
<p>திமுக-வினர் தொடர்ந்து இதுபோன்று மக்களை வஞ்சிக்கும் வகையில் பேசி வந்தால் அவர்களுக்கு எதிராகவே மக்களை இன்னும் வலுவாக திருப்பும் என்று பலரும் எச்சரித்து வருகின்றனர். மக்களை தொடர்ந்து விமர்சி்த்து திமுக மூத்த தலைவர்கள் பலரும் பேசி வருவதற்கு அந்த கட்சியின் தலைவர் மு.க.<a title="ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/mk-stalin" data-type="interlinkingkeywords">ஸ்டாலின்</a> முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பாரா? என்ற கேள்வியையும் பலரும் முன்வைத்து வருகின்றனர்.</p>
<p>கொளத்தூர் தொகுதியில் அடைந்த தோல்வியையும், திமுக தோல்வியையும் அவரே ஏற்று மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன் என்று பதிவிட்ட பிறகும் தொடர்ந்து திமுக-வினர் மக்களை வஞ்சித்துப் பேசி வருவதற்கு கட்சி பாரபட்சமின்றி பல தரப்பினரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/food/this-fruit-is-more-powerful-than-shilajit-details-in-pics-271136" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article