
<p style="text-align: left;">மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு சட்ட ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்று காங்கிரஸ் எம்பி விஷ்ணு பிரசாத் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: left;">சேலம் அண்ணா பூங்கா எதிரே உள்ள சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் கூட்ட அரங்கில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்த கருத்தரங்க கூட்டம் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சாரதா தேவி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சேர்ந்த கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர்.</p>
<p style="text-align: left;">இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஷ்ணு பிரசாத் பேசுகையில்,</p>
<h2 style="text-align: left;">மோடி பதில் அளிக்கவில்லை</h2>
<p style="text-align: left;">“இந்தியா கூட்டணி சார்பில் சேலம் மாநகரில் நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என்பதை மக்களிடையே எடுத்து கூறும் வகையில் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தை பாஜக எவ்வாறு ஒடுக்கினார்கள். ராகுல் காந்தி ஜனநாயக முறையில் போராடினாலும், மாணவர்கள் போராடினாலும், கை கால்களை உடைத்து துன்புறுத்தி ஒடுக்குமுறை செய்தனர். மாணவர்களின் மீது எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினீர்கள் என்ற கேள்விக்கு பாராளுமன்றத்தில் மோடியோ அமித்ஷாவோ எந்த பதிலும் அளிக்கவில்லை. துப்பாக்கியால் சுடக்கூடிய அளவிற்கு மாணவர்கள் என்ன தவறு செய்தார்கள் என கேள்வி எழுப்பினோம். ஆனால் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து ஒத்திவைத்து பாராளுமன்றத்தை முடக்கும் வேளையில் அவர்கள்தான் ஈடுபட்டார்கள்.</p>
<h2 style="text-align: left;">யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை<br /> </h2>
<p style="text-align: left;">மேகதாது அணை விவகாரம் இந்தக் கூட்டத் தொடரில் அதிகமாக பேசப்படவில்லை. மேகதாது அணையை கட்டுவதற்கு நாங்கள் எப்போதும் எதிர்கின்றோம், அனுமதிக்க மாட்டோம். அதற்கான சாத்திய கூறுகள் இல்லை, சட்டத்திலும் இடமில்லை, எங்கள் மனதிலும் இடமில்லை என்பதை தெளிவாக தெரிவித்து விட்டோம். தமிழ்நாடு சட்ட ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. கர்நாடக அரசு தேர்தலை முன்னிட்டு அவர்கள் அரசியல் செய்யலாம். ஆனால், தமிழக மக்களின் உரிமைகளை எப்போதும் காத்து நிற்போம்” என்றார். இடையே சச்சிதானந்தம் கூறும் போது, மாநிலங்களவையில் அன்புமணி ராமதாஸ் மக்களவையில் சுதா அவர்களும் கேள்வி எழுப்பினார்கள். இந்த இரண்டு பேரில் கேள்விக்கும் மாறுபட்ட பதில்களை நாடாளுமன்றத்தில் பாஜக அரசு தெரிவித்துள்ளனர்.</p>
<p style="text-align: left;">அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டினுடைய அனுமதி தேவையில்லை என்ற வகையில் பதிலும் மக்களவையில் சுதா எழுப்பிய கேள்விக்கு ஏற்கனவே காவிரி நதிநீரை பங்கிட்டு பயன்படுத்திக் கொண்டிருக்கிற கூடிய மாநிலத்தின் அனுமதி பெறாமல் மேகதாதனை கட்ட முடியாது என கூறியுள்ளனர். இந்தியா கூட்டணியை பொறுத்தவரை தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த உறுப்பினர்களும் மேகதாது அணை கட்டக் கூடாது என பேசியுள்ளோம். சட்டமன்றத்திலும் அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளோம் என்று தெரிவித்தார்.</p>
<p style="text-align: left;">கர்நாடக வனத்துறையினர் மூன்று தமிழர்களை சுட்டுக் கொன்றது வன்மையாக கண்டிக்கக் கூடியது. சாம்ராட் நகர் மாவட்டத்தில் மூன்று விவசாயிகள் மாடு மேய்க்க சென்ற போது பக்கத்தில் நின்று சுட்டுக்கொன்று உள்ளனர். ஒரே ஒரு துப்பாக்கி மட்டுமே கைப்பற்றியுள்ளனர். மூன்று பேரை சுட்டு கொன்று விட்டு ஒருவர் தப்பி சென்று உள்ளார். இது மனித உரிமை மீறல், அண்டை மாநிலங்கள் தமிழரை இப்படி நடத்துவது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். கன்னடர்கள், மலையாளிகளை நாங்கள் எம்எல்ஏ, எம்பி ஆக்கி பார்க்கிறோம். ஆனால் அந்த மாநிலங்களில் தமிழர்களை உயிரை பறிக்கிறார்கள் என்றால், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். யானையால் மிதிபட்டால் ரூ.25 லட்சம் நிவாரணம் கொடுக்கும் அரசு, ஒருவரை சுட்டுக் கொன்றால் ரூ.5 லட்சம் கொடுப்பது நியாயமா என கேள்வி எழுப்பினர். </p>
<h2 style="text-align: left;">சிபிஐ விசாரணை வேண்டும்</h2>
<p style="text-align: left;">கர்நாடகாவில் வாழ்ந்தாலும் தமிழர் என்பதால் முதலமைச்சர் நிதி வழங்கியுள்ளார். இரு மாநில பிரச்சனை போன்று மீண்டும் ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி விடக்கூடாது. மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதனை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என தெரிவித்தார். கர்நாடக மழை பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு மின்சார வசதி, சுகாதாரம், நல்ல குடிநீர் கிடையாது, இவ்வாறு இருக்கக்கூடிய மலைவாழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இலங்கை மீனவர்கள் நடுக்கடலில் கொல்லப்படுகிறார்கள் என்றால் இலங்கை அரசிடம் எப்படி கேள்வி கேட்கிறோமோ அதே போல பக்கத்து மாநிலத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.</p>
Source: Read Full Article