
<p style="text-align: justify;">சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ. 842 கோடி செலவில் பிரம்மாண்ட மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளின் ஒரு பகுதியாக, எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, ஏற்கனவே எழும்பூர் - தஞ்சாவூர் மார்க்கத்தில் இயங்கும் உழவன் எக்ஸ்பிரஸ் உட்பட 9 விரைவு ரயில்களின் சேவைகளில் நாளை முதல் 20-ம் தேதி வரை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.</p>
<p style="text-align: justify;">இதன் தொடர்ச்சியாக, கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சில மின்சார ரயில்களின் சேவைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<h3 style="text-align: justify;">முழு மற்றும் பகுதி நேர ரயில் ரத்து விவரங்கள்</h3>
<p style="text-align: justify;">ஆகஸ்ட் 22 முதல் 30 வரை உள்ள நாட்களில், கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 11:20, 11:40 மற்றும் 11:59 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்களின் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல சில ரயில்கள் பகுதி நேரமாக மட்டுமே இயக்கப்படும். அதன்படி, கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 3:50 மணிக்கு புறப்படும் ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். மேலும் கூடுவாஞ்சேரியில் இருந்து கடற்கரைக்கு செல்லும் இரவு 10:15 மற்றும் 11:20 மணி ரயில்களும், செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு செல்லும் இரவு 10:20 மற்றும் 11:20 மணி ரயில்களும் தாம்பரம் வரையிலேயே இயங்கும்.</p>
<h3 style="text-align: justify;">ஆகஸ்ட் 16 மற்றும் 23 தேதிகளில் கூடுதல் சேவை மாற்றம்</h3>
<p style="text-align: justify;">இவை தவிர, ஆகஸ்ட் 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரவு நேரங்களில் கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு புறப்படும் 11:20, 11:40, 11:59 மணி ரயில்களும், மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு செல்லும் இரவு 11:00 மற்றும் 11:40 மணி ரயில்களும் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன. எனவே ரயில் பயணிகள் அனைவரும் இந்தச் சேவை மாற்றங்களை அறிந்து, அதற்கேற்ப தங்களது பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு சென்னை ரயில்வே கோட்டம் கேட்டுக்கொண்டுள்ளது.</p>
Source: Read Full Article