
<p>விழுப்புரம்: திண்டிவனம் அருகே டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் முற்றுகை: சி.வி.சண்முகம் ஆதரவு தெரிவித்த நிலையில் அங்கிருந்த மதுப்பிரியர்கள் எதிர்ப்பால் பரபரப்பு ஏற்பட்டது.</p>
<p>விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த நடுவனந்தல் புதூரில், கிராம மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த 18-ஆம் தேதி புதிதாக டாஸ்மாக் மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து 3 நாட்களாக டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.</p>
<p>போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மைலம் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் இன்று பிற்பகல் 12 மணியளவில் நேரில் சென்று பிரச்சனைக்குரிய டாஸ்மாக் கடையைப் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்: குடியிருப்பு மற்றும் கிராமங்கள் நிறைந்த நடுவனந்தல் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே சட்டமன்றத்தில் பேசியுள்ளேன்.</p>
<p>இந்த புதிய டாஸ்மாக் கடையைத் திறப்பதற்கு எதிராக சம்பந்தப்பட்ட கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் முறைப்படி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, உடனடியாக இந்த டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் நடவடிக்கைக்காக 5 நாட்கள் பொறுத்திருப்போம். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முறைப்படி அறிவிக்கப்படும்.</p>
<p>முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கிராம மக்களுடன் இணைந்து டாஸ்மாக் கடையை மூடக் கோரி கோஷமிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு மது அருந்த வந்த மதுப்பிரியர்கள் சிலர் "கடையை மூடக்கூடாது" என எதிர்த்து முழக்கமிட்டனர்.</p>
<p>இதனால் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பு உருவானது. உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர் தலையிட்டு, முழக்கமிட்ட மதுப்பிரியர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.</p>
Source: Read Full Article