
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: உலகப்புகழ் பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி திருவிழா நடந்து வரும் நிலையில் பக்தர்கள் நடைபயணமாக செல்கின்றனர். எனவே ஓட்டுநர்கள் கவனமாக பேருந்துகளை இயக்க வேண்டும். பக்தர்கள் செல்லும் பகுதிகளில் வேகத்தை குறைத்து, ஹாரன் ஒலி எழுப்பி இயக்க வேண்டும் என்று போக்குவரத்து ஏஐடியுசி வலியுறுத்தி உள்ளது_ </p>
<p style="text-align: justify;">வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து ஓட்டுநர்களும் கூடுதல் கவனத்துடன் பேருந்துகளை இயக்க வேண்டும்; பக்தர்கள் அதிகம் நடமாடும் பகுதிகள் மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் வேகத்தை குறைத்து, ஹாரன் ஒலி எழுப்பி விபத்துகளைத் தவிர்க்க வேண்டும் என்று போக்குவரத்து ஏஐடியுசி வேண்டுகோள் விடுத்துள்ளது.</p>
<p style="text-align: justify;">உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் இத்திருவிழாவில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலகின் பல நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.</p>
<p style="text-align: justify;">சாதி, மதம், இனம் ஆகிய வேறுபாடுகளை கடந்து சர்வதேச ஒற்றுமையை பறைசாற்றும் விழாவாக வேளாங்கண்ணி திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாகவும், நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் ரதங்கள் மற்றும் சப்பரங்களுடனும் வேளாங்கண்ணிக்கு வந்து செல்கின்றனர்.</p>
<p style="text-align: justify;">இதனால் சாலைகளில் பக்தர்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் உள்பட அனைத்து வாகன ஓட்டுநர்களும் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும். குறிப்பாக பக்தர்கள் அதிகமாக நடமாடும் பகுதிகள், முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் சாலையோரங்களில் பேருந்துகளை மெதுவாக இயக்குவதுடன், தேவையான இடங்களில் ஹாரன் ஒலி எழுப்பி பக்தர்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும்.</p>
<p style="text-align: justify;">பாதயாத்திரையாக வரும் பக்தர்களும், ரதங்கள் மற்றும் சப்பரங்களுடன் வரும் குழுக்களும் சாலையின் இடதுபுறமாக, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் பாதுகாப்பாக செல்ல வேண்டும். கடந்த காலங்களில் ஏற்பட்ட மோசமான அனுபவங்களை கருத்தில் கொண்டு, பக்தர்கள் ரயில் தண்டவாளங்களில் நடந்து செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் ஏஐடியுசி கேட்டுக்கொண்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு முக்கிய இடங்களில் தங்குமிடம், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை மாவட்ட நிர்வாகங்கள் போதுமான அளவில் ஏற்படுத்த வேண்டும். தற்போது பரவி வரும் பன்றிக்காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட நோய்களை கருத்தில் கொண்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p>
<p style="text-align: justify;">மேலும், திருவிழாவையொட்டி வரும் பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை முக்கிய இடங்களில் ஏற்படுத்தி, மருத்துவக் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">திருவிழாவையொட்டி அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் சிறப்பு பேருந்துகளை உரிய முறையில் பராமரித்து, பழுதில்லாத நிலையில் இயக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் பயணம் செய்வதால் பேருந்துகளின் பிரேக், டயர் உள்ளிட்ட முக்கிய பாகங்கள் முறையாக பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் ஏஐடியுசி தெரிவித்துள்ளது.</p>
<p style="text-align: justify;">இந்த ஆண்டு வேளாங்கண்ணி திருவிழாவை விபத்தில்லாத, பாதுகாப்பான மற்றும் சிறப்பான திருவிழாவாக நடத்துவதற்கு ஓட்டுநர்கள், பக்தர்கள், மாவட்ட நிர்வாகங்கள், போக்குவரத்துக் கழகங்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று போக்குவரத்து ஏஐடியுசி வேண்டுகோள் விடுத்துள்ளது.</p>
Source: Read Full Article