
<h2><strong>" போதை பொருட்கள் கடத்தல் "</strong></h2>
<p>தெற்கு ரயில்வேயில் சென்னை உட்பட ஆறு கோட்டங்களில் 725 ரயில் நிலையங்கள் உள்ளன. ரயில் பயணியர் போர்வையில் வரும் சில ஆசாமிகள் , உடைமைகளை திருடுவதோடு , கஞ்சா போன்ற போதை பொருட்களையும் கடத்துகின்றனர்.</p>
<p>போதைப் பொருட்களின் கடத்தலை தடுக்க , ரயில்வே பாதுகாப்பு படையும் , மாநில காவல் துறையின் கீழ் செயல்படும் ரயில்வே போலீசாரும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் , மாவட்டங்களில் இயங்கும் போலீசாருக்கு வரும் ரகசிய தகவல்கள் அடிப்படையில் , அவர்களும் ரயில்கள் , ரயில் நிலையங்களில் சோதனை நடத்தலாம் என , ரயில்வே அனுமதி அளித்துள்ளது.</p>
<h2><strong>இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது ;</strong></h2>
<p>போதைப் பொருட்கள் தடுப்பு மற்றும் கடத்தல்கள் தொடர்பாக , ரயில்வே பாதுகாப்பு படை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தி வருவோரை பிடிக்க, சிறப்பு குழுக்களையும் அமைத்துள்ளோம்.</p>
<p>கடந்த 2024 முதல் , கடந்த மாதம் வரை, 809 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. 359 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மொத்தம், 187 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒடிஷாவில் இருந்து தென்மாநிலங்களுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன.</p>
<p>இரவு நேரங்களில் , பொதுப் பயணியர் பெட்டிகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீஸ் மட்டுமின்றி, உள்ளூர் போலீசாரும், கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் இனி ஈடுபட உள்ளனர்.</p>
<p>ரயில்கள் , ரயில் நிலையங்களில் சோதனை செய்ய , உள்ளூர் போலீசாரும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களும் உள்ளூரில் கிடைக்கும் தகவல் அடிப்படையில் சோதனை நடத்தி குற்றவாளிகளை பிடிக்கலாம். கஞ்சா பொருட்களையும் பறிமுதல் செய்யலாம். இருப்பினும், சம்பந்தப்பட்ட பகுதி ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுப்பது நல்லது என தெரிவித்துள்ளோம்.</p>
Source: Read Full Article