
<p style="text-align: justify;"><strong>தஞ்சாவூர்:</strong> கொண்டாட்டம் இல்லாமல் திண்டாட்டமாக மாறி விட்டது இந்தாண்டு ஆடிப் பெருக்கு விழா. அகண்ட காவிரி வறண்டு போன நிலையில் புதுமணத் தம்பதிகள் காவிரியாற்றின் மண் திட்டுகளில் தங்களின் மணமாலைகளை வீசி சென்றனர்.</p>
<p style="text-align: justify;">விவசாயம் செழிக்கவும், நாடு சுபிட்சமாக விளங்கவும் வாழ்வாதாரமாகத் திகழும் காவிரித் தாய்க்கு நன்றி தெரிவித்து மலர் தூவி வணங்கும் புனிதமிக்க "ஆடிப்பெருக்கு" திருவிழா, தமிழகத்தில் பண்டைக்காலம் தொட்டே பாரம்பரியமிக்கப் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்தாண்டு அகண்ட காவிரி வறண்டு போய் கிடப்பதால் ஆடிப்பெருக்கு களையிழந்துள்ளது. கொண்டாட்டமாக காணப்படும் காவிரி பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்தாண்டு வறண்டு போன நீர் நிலைகளை கண்டு மக்கள் கண்ணீர் விடும் நிலைதான்.</p>
<p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/03/9925899509623562598cb157dcfe4b3e1785730121195733_original.jpg" /></p>
<p style="text-align: justify;">ஆடி மாதத்தின் 18-ஆம் நாளில் கொண்டாடப்படும் இத்திருநாளில், காவிரி பாயும் அனைத்துப் படித்துறைகளிலும் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாகக் கூடி, காவிரி ஆற்றுக்குச் சீர்வரிசைகள் படைத்து, சிறப்புப் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க "புஷ்ய மண்டபப் படித்துறையில்" ஆடிப்பெருக்கு நாளன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள். இதனால் அப்பகுதியே திருவிழாக்கோலம் பூண்டு, மக்கள் வெள்ளத்தில் மிதப்பது வழக்கம்.</p>
<p style="text-align: justify;">ஆனால் இந்த ஆண்டு, போதிய மழையின்மை மற்றும் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படாத காரணத்தால், காவிரி ஆறு முற்றிலும் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. ஆற்றின் படித்துறைகள் நீர்வரத்தின்றி வெறிச்சோடிக் கிடப்பதால், இந்த ஆண்டின் ஆடிப்பெருக்கு விழா தனது வழக்கமான பொலிவையும் உற்சாகத்தையும் இழந்து களை இழந்து காணப்படுகிறது.</p>
<p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/03/43f600bf077a7de439abc41d63d240f71785730131853733_original.jpg" /></p>
<p style="text-align: justify;">கடந்த 2017-ஆம் ஆண்டில் பருவமழை பொய்த்து, மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்ததால் ஆடிப்பெருக்கு சமயத்தில் ஆற்றில் தண்ணீர் வரவில்லை. நீர்வரத்தின்றி மணல் வெளிகளாகக் காட்சியளித்த காவிரியைப் பார்த்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த வேதனையடைந்தனர். தற்போதைய 2026-ம் ஆண்டிலும் அதே போன்றதொரு கடுமையான சூழல் மீண்டும் உருவாகியுள்ளது தஞ்சை மாவட்ட மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வரலாற்றில் மீண்டும் ஒருமுறை காவிரி நீர்வரத்தின்றி வறண்டு போயிருப்பது, இப்பகுதி விவசாயிகளின் இயல்பு வாழ்க்கையையும் நம்பிக்கையையும் கடுமையாகப் பாதித்துள்ளது.</p>
<p style="text-align: justify;">குறிப்பாகப் புதுமணத் தம்பதிகள் மிகுந்த கவலையடைந்தனர். ஆடிப்பெருக்கு நாளன்று புதுமணத் தம்பதிகள் காவிரிப் படித்துறைக்கு வந்து, தங்கள் திருமண மாலையை ஆற்றில் விட்டு, காவிரித் தாயை வணங்கி, தாலிக்கயிற்றை மாற்றிக் கொள்வது தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்படும் மிக முக்கியச் சடங்காகும். திருமண வாழ்க்கை காவிரி நதியைப் போலத் தடையின்றிப் பெருகி ஓட வேண்டும் என்ற நம்பிக்கையில் நிறைவேற்றப்படும் இச்சடங்கைச் செய்யக்கூட ஆற்றில் சொட்டு நீர் இல்லாத நிலை உருவாகியுள்ளது. </p>
<p style="text-align: justify;">படித்துறைகளில் தேங்கி நிற்கும் சிறிதளவு நீரைக் கொண்டோ அல்லது குளம், ஏரி, குழாய் நீரைப் பயன்படுத்தியோ சடங்குகளைச் செய்ய வேண்டிய அவலநிலைக்குப் புதுமணத் தம்பதிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஆடி மாதத்தில் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினால்தான் குறுவைச் சாகுபடி செழிக்கும் என்பதும், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் என்பதும் அப்பகுதி மக்களின் ஆழமான நம்பிக்கை. ஆனால், வழக்கமாகத் தண்ணீரின் பேரிரைச்சலாலும், மக்களின் மகிழ்ச்சிக் குரலாலும் அலைமோதும் திருவையாறு புஷ்ய மண்டபப் படித்துறை, இன்று நீரின்றிக் காய்ந்து போய் பாலைவனம் போன்று அமைதியாகக் காட்சியளித்தது தஞ்சை மக்களிடையே பெரும் கவலையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.</p>
<p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/03/c38d970b08439747c555c7d7fb857bce1785730142642733_original.jpg" /></p>
<p style="text-align: justify;">காவிரியில் புனித நீராடி புத்தாடை அணிந்து காவிரி தாய்க்குப் வெல்லமிட்ட பச்சரிசி, காதோலை கருகமணி, பழங்கள் உள்ளிட்டவற்றை வைத்து படையலிட்டு பொதுமக்கள் வழிபாடு நடத்துவர். காலை முதல் மாலை வரை இந்த வழிபாடுகளால் நீர் நிலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். திருமணமாகாத பெண்கள் மஞ்சள் கயிறைக் கழுத்தில் கட்டிக்கொள்வர். புதுமணத் தம்பதியினர் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளைத் தண்ணீரில் விடுவர்.</p>
<p style="text-align: justify;">கடந்த 2017ம் ஆண்டில் தண்ணீர் வரத்தின்றி காவிரி ஆறு வறண்டு காணப்பட்டது. அதனால் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு புஷ்ய மண்டபப் படித்துறையில் காவிரி ஆற்றில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்குழாய் அமைத்து, பொதுமக்கள் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆழ்குழாயில் வழிந்தோடிய தண்ணீரில் புதுமணத் தம்பதியினர் மாலைகளை விட்டனர்.</p>
<p style="text-align: justify;">சில பெண்கள் படித்துறையில் வெல்லமிட்ட பச்சரிசி, பழங்கள் உள்ளிட்டவற்றை வைத்து படையலிட்டு வழிபட்டனர். மேலும், கழுத்தில் மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர். இருப்பினும், காவிரியில் தண்ணீர் இல்லாததால் படித்துறைகளில் விழாவுக்கான அடையாளம் இன்றிக் காணப்பட்டது. இதேபோல, தஞ்சாவூரில் உள்ள கல்லணைக் கால்வாய் படித்துறைகளும் வெறிச்சோடிக் கிடந்தன. தற்போது இந்தாண்டும் அதே நிலைதான் உருவாகி உள்ளது. ஆடிப்பெருக்கு என்றாலே முதல் வாரத்தில் இருந்தே திருவிழா போல் களைக்கட்டும். ஆனால் இந்தாண்டு எவ்வித சலனமும் இல்லாமல் உள்ளது.</p>
<p style="text-align: justify;">இந்தாண்டும் திருவையாறில் பேரூராட்சி சார்பில் ஆழ்குழாய் அமைத்து மக்கள் குளிக்க ஷவர் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் மக்கள் குளித்தனர். வழிந்தோடிய தண்ணீரில் புதுமணத் தம்பதிகள் தங்களின் மாலைகளை விட்டு வழிபாடுகள் நடத்தினர். இதனால் இந்தாண்டு ஆடிப் பெருக்கு "ஆட்டம்" கொண்டாட்டம் இல்லாத விழாவாக மாறிவிட்டது.</p>
Source: Read Full Article