
<p style="text-align: justify;">சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட முயன்ற ஆந்திராவைச் சேர்ந்த 73 வயது முதியவரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.</p>
<h3 style="text-align: justify;">பேருந்து பயணத்தில் விரிந்த வலை</h3>
<p style="text-align: justify;">ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா பகுதியைச் சேர்ந்த சங்கரையா (73) என்பவர் சென்னை ஆலந்தூரில் தங்கி, விமான நிலைய வளாகப் பகுதிகளில் அடிக்கடி சுற்றி வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு மாநகரப் பேருந்தில் பயணித்த சங்கரையா, சென்னை விமான நிலைய சுங்கத்துறையில் காலியிடங்கள் இருப்பதாகவும், முறைப்படி விண்ணப்பித்தால் வேலை கிடைக்கும் என்றும் செல்போனில் யாருடனோ பேசுவது போல் நடித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இதைக் கேட்ட பக்கத்து இருக்கை பயணியான தாம்பரத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர், பொறியியல் முடித்துள்ள தன் மகளுக்கு வேலை கிடைக்குமா என்று கேட்டுள்ளார். அதற்கு சங்கரையா, விண்ணப்பப் படிவத்திற்கு 2,500 ரூபாயும், தனக்குக் கூலியாக 500 ரூபாயும் என மொத்தம் 3,000 ரூபாய் கொடுத்தால் வேலையை முடித்துத் தருவதாகக் கூறியுள்ளார். அதை நம்பிய ராமமூர்த்தியும் உடனடியாக 3,000 ரூபாயைக் கொடுத்துள்ளார்.</p>
<h3 style="text-align: justify;">சந்தேகம் அடைந்து பிடித்துக் கொடுத்த பயணி</h3>
<p style="text-align: justify;">இந்நிலையில் நேற்று காலை ராமமூர்த்தியை மீண்டும் தொடர்புகொண்ட சங்கரையா, விண்ணப்பம் சமர்ப்பிக்க இன்றுதான் கடைசி நாள் எனக் கூறி, சுங்கத்துறை அதிகாரிகளுக்குக் கொடுக்க 65,000 ரூபாய் பணத்துடன் சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலைய வாசலுக்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி பணத்துடன் சென்ற ராமமூர்த்தி, அங்கு வந்த சங்கரையாவின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்து அவரைச் சமயோசிதமாக மடக்கிப் பிடித்தார். பின்னர் அவரை நேரடியாகச் சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் கொண்டு போய் ஒப்படைத்தார்.</p>
<h3 style="text-align: justify;">தொடரும் மோசடிகள் மற்றும் போலீஸ் விசாரணை</h3>
<p style="text-align: justify;">காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், சங்கரையா சுங்கத்துறை பெயரைக் பயன்படுத்தி இதுபோன்று பலரிடமும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது. இதையடுத்து அவரைப் போலீசார் கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திப் புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இவரிடம் ஏமாந்த நபர்கள் குறித்து அறிய அவரை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் இதுபோன்ற மோசடிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அண்மையில்தான் பயணி ஒருவரிடம் சுங்கத்துறை அதிகாரி எனப் பொய் கூறி 12 சவரன் தங்க நகை பறிக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.</p>
Source: Read Full Article