
<p>மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார வைகை ஆற்றுப் பகுதிகளில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக ஆற்று மணல் மற்றும் கிராவல் அள்ளப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. </p>
<div dir="auto"><strong>அரசு சார்பில் மணல் விற்பனைக்கு அனுமதி வழங்கப்படவில்லை</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய நீர்வழித்தடமான வைகை ஆற்றில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அரசு சார்பில் மணல் விற்பனைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும், ஆற்றுப் படுகைகளில் அவ்வப்போது சட்டவிரோத மணல் திருட்டு நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக மானாமதுரை அருகே நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள முத்தனேந்தல் வைகை ஆற்றின் இணைப்புக் கால்வாய் பகுதியில் இரவு நேரங்களில் இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் மூலம் மணல் அள்ளப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல், மானாமதுரை சுற்றுவட்டாரத்தில் உள்ள கோச்சடை, டி. புதுக்கோட்டை, வேதியரேந்தல் உள்ளிட்ட பகுதிகளிலும் வைகை ஆற்றுப் பகுதிகளில் மணல் மட்டுமின்றி கிராவலும் தொடர்ந்து சட்டவிரோதமாக அள்ளப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் ஆற்றின் இயற்கை அமைப்பு பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது</strong>.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto">இந்த நடவடிக்கைகள் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் கனிமவளத்துறையின் கண்காணிப்பை மீறி நடைபெறுவதாக கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, இயற்கை வளங்களும் கொள்ளையடிக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். தமிழக வெற்றிக் கழக அரசின் கனிமவளத்துறை கனிம வள கொள்ளைகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படும் நிலையில், மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் இந்த சட்டவிரோத செயல்கள் குறித்து கனிமவளத்துறை இதுவரை உறுதியான நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>கனிமவளத்துறை அமைச்சர் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">எனவே, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு நேரடியாக தலையிட்டு, மணல் மற்றும் கிராவல் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், வைகை ஆற்றுப் பகுதிகளில் 24 மணி நேர கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</div>
Source: Read Full Article