
<p style="text-align: justify;">திருச்சி: பிள்ளையாரப்பா நீயாவது விவசாயிகளை காப்பாற்றுப்பா என்று தமிழகத்திற்கு தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், விவசாயிகள் நூதன முறையில் விநாயகரிடம் மனு கொடுத்தனர். </p>
<p style="text-align: justify;">தமிழகத்திற்கு உரிய காவிரி தண்ணீரைத் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டஈடு வழங்க வலியுறுத்தியும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயில் மாணிக்க விநாயகரிடம் மனு அளித்து வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
<p style="text-align: justify;"><strong>மாணிக்க விநாயகரிடம் மனு</strong></p>
<p style="text-align: justify;">திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலில் உள்ள மாணிக்க விநாயகர் சன்னதியில், அய்யாக்கண்ணு தலைமையில் திரண்ட விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, அந்த மனுவை கோயில் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தினர்.</p>
<p style="text-align: justify;">பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் குறுவை சாகுபடிக்குக் கர்நாடகாவிலிருந்து தண்ணீர் கிடைக்காததால், விவசாயிகளுக்குப் ஏறத்தாழ ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைத் தற்கொலையிலிருந்து காப்பாற்ற, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களையும் அரசு உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.</p>
<p style="text-align: justify;">கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், காவல்துறை அதற்கு அனுமதி அளிக்கவில்லை. டெல்லியில் குடியரசுத் தலைவரிடம் மனு: உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி கர்நாடக அரசு காவிரித் தண்ணீரைத் திறந்து விட மறுத்து வருகிறது. </p>
<p style="text-align: justify;">இதனால் ஏற்பட்டுள்ள ரூ.1 லட்சம் கோடி நஷ்டத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி (04.09.2026) டெல்லி சென்று இந்தியக் குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க உள்ளோம்.</p>
<p style="text-align: justify;">"தமிழக முதல்வரை கர்நாடகாவிற்கு வர வேண்டாம்" என அம்மாநிலத் முதல்வர் டி.கே. சிவகுமார் கூறிய நிலையில், அவர் தற்போது தமிழகம் வந்துள்ளார். கர்நாடகாவில் கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படும் சூழலில், தமிழகத்தில் நம்மிடையே ஒற்றுமை இல்லாத நிலை உள்ளது.</p>
<p style="text-align: justify;">காவிரி நீர் பிரச்சனை மற்றும் விவசாயிகளின் கடன் சுமைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என இப்போராட்டத்தின் வாயிலாக விவசாயிகள் அரசை வலியுறுத்தியுள்ளோம்.</p>
<p style="text-align: justify;">மேட்டூர் அணையில் போதுமான அளவுக்கு நீர் இருப்பு இல்லாததால், டெல்டா பாசனத்துக்காக இதுவரை திறக்க இயலாத நிலை நிலவுகிறது. இதனால், டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் ஆதாரமுள்ள விவசாயிகள் மட்டுமே குறுவை பருவ நெல் சாகுபடியைத் தொடங்கினர். ஆற்றுப்பாசன விவசாயிகள் குறுவை சாகுபடியைக் கைவிட்டனர்.</p>
<p style="text-align: justify;">இதனால், டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு 5.66 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட குறுவை சாகுபடி நிகழாண்டு காவிரி நீர் வரத்து இல்லாததால், இலக்கும் ஏறக்குறைய 4.10 லட்சம் ஏக்கராக குறைக்கப்பட்டது. இந்நிலையில், குறுவை பருவத்துக்கான நெற் பயிர் நடவு காலம் ஜூலை 31 ஆம் தேதி முடிவடைந்தது.</p>
<p style="text-align: justify;">இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.57 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 1.51 லட்சம் ஏக்கராகவும், திருவாரூர் மாவட்டத்தில் 1.52 லட்சம் ஏக்கர் இலக்கில் 1.15 லட்சம் ஏக்கராகவும் குறுவை சாகுபடிப் பரப்பளவு குறைந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 97 ஆயிரத்து 200 ஏக்கர் என்ற இலக்கை விஞ்சி 98 ஆயிரத்து 500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 75 ஆயிரத்து 250 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு 4,300 ஏக்கராக குறைந்துள்ளது.</p>
<p style="text-align: justify;">நான்கு மாவட்டங்களிலும் மொத்தம் 4.10 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், 3.68 லட்சம் ஏக்கர் மட்டுமே எட்டப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நிகழாண்டு 1.97 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.=</p>
Source: Read Full Article