
<p style="text-align: justify;">காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்பட பாணியில், வடமாநில கொள்ளையர்கள் கண்டெய்னர் லாரியில் வந்து அடுத்தடுத்து ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
<h3 style="text-align: justify;">கும்மிடிப்பூண்டியில் தொடர்ந்த துணிச்சல் கொள்ளை</h3>
<p style="text-align: justify;">திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் உள்ள ஆக்சிஸ் வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு நேற்று காலை வாடிக்கையாளர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.</p>
<p style="text-align: justify;">விசாரணையில், ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மீது கருப்பு நிற பெயிண்ட அடித்து மறைத்த மர்ம கும்பல், காஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம்-மை தகர்த்து ரூ.11,95,800 பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. மேலும், அந்த ஏடிஎம்-ல் கைவரிசை காட்டுவதற்கு முன்பாக, அருகில் இருந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏடிஎம்-மை உடைக்க முயன்று முடியாததால் தப்பியோடியதும் சிசிடிவி ஆய்வில் தெரியவந்தது.</p>
<h3 style="text-align: justify;">அடுத்தடுத்த சம்பவங்களால் உறைந்த காவல்துறை</h3>
<p style="text-align: justify;">கடந்த 25-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே உள்ள புதுப்பேடு கிராமத்தில், ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தை இதே காஸ் வெல்டிங் பாணியில் தகர்த்து ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ஒரே பாணியில் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளைச் சம்பவங்களால் 3 மாவட்ட போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.</p>
<h3 style="text-align: justify;">ஸ்ரீபெரும்புதூர் பார்க்கிங்கில் சிக்கிய லாரி: சீல் வைப்பு</h3>
<p style="text-align: justify;">போலீசாரின் தீவிர கண்காணிப்பு மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், கொள்ளையர்கள் ராஜஸ்தான் மாநிலப் பதிவு எண் கொண்ட கண்டெய்னர் லாரியில் வந்து கைவரிசை காட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. தேடுதல் வேட்டையின் முடிவில், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் பகுதியில் உள்ள தனியார் கண்டெய்னர் லாரி பார்க்கிங்கில் அந்த சந்தேகத்திற்குரிய லாரி நிறுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.</p>
<p style="text-align: justify;">உடனடியாக நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் அந்த பார்க்கிங் பகுதியை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, லாரியில் இருந்த தடயங்கள் மற்றும் கைரேகைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், அங்கு தங்கியிருந்த வடமாநில ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p>
<p style="text-align: justify;">வடமாநில கொள்ளையர்கள் கண்டெய்னர் லாரியைப் பயன்படுத்தி தமிழகத்தில் புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வரும் சம்பவம் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே பெரும் பரப்பரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>
Source: Read Full Article