
<p style="text-align: justify;">கோவை மாவட்டம் ஆனைக்கட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதிகளில், யானைகளின் வலசை பாதையை ஆக்கிரமித்து எந்தவித அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக ரிசார்ட்டுகள் கட்டப்பட்டு இயங்கி வருகின்றன. இதனால் வனவிலங்குகளின் பாதுகாப்பு கேள்விகுறியாகியுள்ளதாக கூறி, சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முரளிதரன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கோவை ஆட்சியர் தலைமையில் வனச்சரக அலுவலர், வடக்கு தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது.</p>
<h3 style="text-align: justify;">8 ரிசார்ட்டுகளை மூட உத்தரவு</h3>
<p style="text-align: justify;">உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆய்வு நடத்திய ஆட்சியர் தலைமையிலான குழு, எண் 24 வீரபாண்டி ஊராட்சி மற்றும் எண் 22 நஞ்சுண்டாபுரம் ஊராட்சிகளில் மொத்தம் 10 ரிசார்ட்டுகள் செயல்படுவதாகவும், அதில் 2 ரிசார்ட்டுகள் மட்டுமே அனுமதி பெற்றுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்தது. அனுமதியின்றி செயல்படும் 8 ரிசார்ட்டுகளையும் உடனடியாக மூடி, அதுகுறித்த அறிக்கையை செப்டம்பர் 18-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என கோவை ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும், பிற ரிசார்ட்டுகள் ஏதேனும் சட்டவிரோதமாக இயங்குகிறதா என்பதை மீண்டும் கள ஆய்வு செய்து, உரிய அனுமதியில்லாத பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>
<h3 style="text-align: justify;">சிறப்புக் குழு அமைக்க கோரிக்கை</h3>
<p style="text-align: justify;">இதற்கிடையே, தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த கணேஷ் என்பவர் தெரிவிக்கையில், வனப்பகுதியில் உள்ள நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்தே இந்த ரிசார்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் நீதிபதி தலைமையில் சிறப்புக் குழு அமைத்து முழுமையான ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ரிசார்ட்டுகள் உடனடியாக மூடப்பட்டு, அவற்றின் மின் இணைப்பு துண்டிக்கப்படாவிட்டால் அவை தொடர்ந்து இயங்கும் அபாயம் உள்ளதாகவும், இதற்கு உடந்தையாக இருந்த உள்ளாட்சி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
Source: Read Full Article