
<p>அதிமுக-வின் தவிர்க்க முடியாத தலைவராகவும், ஜெயலலிதாவின் விசுவாசியாகவும் திகழ்ந்தவர் ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதல் போக்கிற்கு பிறகு, அதிமுக-வை கைப்பற்றுவேன் என்று கூறிவந்தவர் திமுக-வில் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.</p>
<p>அதிமுக சார்பில் முதலமைச்சராக பொறுப்பு வகித்த ஓ.பன்னீர்செல்வம் திமுக-வில் இணைந்தது அவரது ஆதரவாளர்கள் பலருக்கும் அதிருப்தியை உண்டாக்கியது. திமுக மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரும், தானும் மீண்டும் அதிகாரம் மிக்க நபராக உருவெடுக்கலாம் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கணக்கில் தவெக ஓட்டைப்போட்டுவிட்டது. </p>
<h2><strong>ஓ.பன்னீர்செல்வம் - ஓ.பிஎஸ். மகன் மோதல்:</strong></h2>
<p>ஓ.பன்னீர்செல்வம் திமுக-வில் இணைய விரும்பியது முதல் திமுக-வில் இணைந்தது வரை அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு உடன்பாடில்லை என்று கூறப்படுகிறது. அவர் தவெக-வில் இணையவே ஓ.பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், அவர் திமுக பக்கம் சாய்ந்துவிட்டார்.</p>
<p>இந்த சூழலில், ஆளுங்கட்சியாக உள்ள தவெக-வில் இணைய முன்னாள் எம்பி ரவீந்திரநாத் ஆர்வம் காட்டியுள்ளார். இதற்காக அவர் பனையூரில் உள்ள கட்சித் தலைமைக்கு தூது அனுப்பியுள்ளார். ஆனால், அவர்கள் இவரை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வத்துடன் வந்தால்தான் செல்வாக்காக இருக்கும் என்று கூறியதாக கூறப்படுகிறது.</p>
<h2><strong>ஓ.பி.எஸ். தயங்கியது ஏன்?</strong></h2>
<p>இதன் காரணமாகவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் தவெக-வில் இணைகிறாரா? என்ற பேச்சு எழுந்தது. இந்த சூழலில், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அவரது மகன் ரவீந்திரநாத்திற்கும் இடையே இதனால் மனக்கசப்பு உண்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக-வில் இருந்து விலகி, தவெக-விற்கு செல்லவும், ஏற்கனவே சென்ற அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்களின் கதியே அதோகதியாக இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் மகனின் முடிவுக்கு தயக்கம் காட்டி வருகிறார்.</p>
<p>சட்டமன்ற உறுப்பினராக தந்தை ஓ.பன்னீர்செல்வம் இருக்கும் சூழலில், வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட ரவீந்திரநாத்திற்கு திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைப்பதிலும் சவால் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தவெக-வில் இணைந்தால் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெறலாம் என்று ரவீந்திரநாத் கணக்குப் போடுகிறார்.</p>
<h2><strong>தயங்கும் தவெக:</strong></h2>
<p>தற்போது தவெக ஆளுங்கட்சியாக இருப்பதால் தவெக-வில் போட்டியிட பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், அதிமுக-வில் இருந்து விலகி தவெக கூடாரத்திற்கு வந்துள்ள பலரும் தவெக-வில் முக்கிய பதவியைப் பெறுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், தொடர் விமர்சனங்கள் காரணமாக <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a>-வில் அவர்களுக்கு பொறுப்புகள் வழங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.</p>
Source: Read Full Article