
<p>நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் குடிநீர் சேமிப்புத் தொட்டிகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.</p>
<div dir="auto"><strong>தண்ணீர் மூலம் பரவும் நோய்கள்</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித் தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, தலைமையில் (21.08.2026) அன்று சுகாதாரத்துறையின் சார்பில் தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் மற்றும் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களைத் தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானதாகவும், சுகாதாரமான முறையிலும் வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்யவேண்டும். குடிநீர் நீரேற்று நிலையங்கள் மற்றும் நீர்த்தேக்க நிலையங்களில் குளோரின் கலந்த பாதுகாப்பான குடிநீர் மட்டுமே பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் குடிநீர் சேமிப்புத் தொட்டிகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>கொசுப்புழு ஒழிப்பு</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">உள்ளாட்சி அமைப்புகளில் தேவையான எண்ணிக்கையில் டெங்கு தடுப்புப் பணியாளர்களை நியமித்து கொசுப்புழு ஒழிப்பு மற்றும் தடுப்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். மழைநீர் மற்றும் கழிவுநீர் நீண்ட நாட்கள் தேங்கும் வகையில் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுவதுடன் குப்பைகள் மற்றும் தேவையற்ற பொருட்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வீடுகள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் கிடக்கும் பழைய பொருட்கள், டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அகற்ற வேண்டும். டெங்கு, மலேரியா உள்ளிட்ட கொசுக்கள் மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வை பொதுமக்களிடையே தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும். </div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>காய்ச்சி ஆறவைத்த அல்லது பாதுகாப்பான குடிநீரை அருத்துதல்</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">குடிநீரைப் பாதுகாப்பான முறையில் சேமித்து பயன்படுத்துதல், காய்ச்சி ஆறவைத்த அல்லது பாதுகாப்பான குடிநீரை அருத்துதல், சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் பராமரித்தல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது வட்டார மருத்துவ அலுவலருக்கு தகவல் தெரிவித்து, உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையங்களில் சிறப்பு காய்ச்சல் வார்டுகள் எற்படுத்த வேண்டும். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்புள்ள பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்புநடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், சுகாதாரமற்ற குடிநீரால் ஏற்படும் நோய்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மதுரை மாநகராட்சி ஆணையர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர், மாவட்ட சுகாதார அலுவலர், மாநகர் நல அலுவலர், இணை இயக்குநர் நலப்பணிகள், உதவி இயக்குநர் கிராம ஊராட்சிகள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</div>
Source: Read Full Article