
<p><span dir="auto">ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவையும் அதிபர் டொனால்ட் ட்ரம்பையும் சாடும் வகையில் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா இப்போது தனது நிபந்தனைகளின் பேரில் பேச்சுவார்த்தை நடத்த கெஞ்சுகிறது என்று அராக்சி கூறினார். இதற்கிடையே, அமெரிக்க அதிபர் </span><span dir="auto">டொனால்ட் ட்ரம்ப்,</span><span dir="auto"> இந்த நேரத்தில் ஈரானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், திட்டமிடப்பட்ட சந்திப்பு எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். </span></p>
<h2><span dir="auto">நாங்கள் சரணடைய மாட்டோம் – அராக்சி</span></h2>
<p><span dir="auto">அல் ஜசீராவின் தகவல்படி, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, "போரில் அமெரிக்காவின் நோக்கம் ஈரானை சரணடையச் செய்வதே ஆகும். ஆனால், நாங்கள் சரணடைய மாட்டோம். அமெரிக்கா இப்போது எங்கள் நிபந்தனைகளின்படி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கெஞ்சுகிறது," என்று கூறினார்.</span></p>
<p><span dir="auto">"அமெரிக்காவுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) எங்களுக்கு சாதகமாக 13 அம்சங்களும், அவர்களுக்கு (அமெரிக்காவிற்கு) சாதகமாக ஒரே ஒரு அம்சமும் மட்டுமே இருந்தன," என்று அவர் கூறினார். அதன் அமலாக்கத்தை தடுக்கவும், நிறுத்தவும் இஸ்ரேல் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார். </span></p>
<h2><span dir="auto">நாங்கள் போரிலும், ராஜதந்திரத்திலும் வெற்றி பெற்றோம் – அராக்சி</span></h2>
<p><span dir="auto">"நாங்கள் போரிலும் வென்றோம், ராஜதந்திரத்திலும் வென்றோம். எங்கள் நிபந்தனைகளை ஏற்கும்படி எதிரியை கட்டாயப்படுத்தினோம். பேச்சுவார்த்தைகளில் ஈரானின் ராஜதந்திரம், அதன் ராணுவ மற்றும் போர்க்களத் திறன்களால் வலுப்படுத்தப்பட்டது," என்று அப்பாஸ் அராக்சி கூறினார். </span></p>
<h2><span dir="auto">ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் குறித்து ட்ரம்ப் என்ன கூறினார் .</span><span dir="auto">?</span></h2>
<p><span dir="auto">முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நேற்று தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், " ஈரானிய</span><span dir="auto"> இஸ்லாமியக் குடியரசுடன் தற்போது நடைபெற்று வரும் அல்லது திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தைகள் எதுவும் இல்லை . அமெரிக்க கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடர்கிறது" என்று கூறினார்.</span></p>
<p><span dir="auto">மேலும், "ஹார்முஸ் ஜலசந்தி திறந்துள்ளது மற்றும் இயல்பாக இயங்குகிறது. மேலும், கடலில் பதிக்கப்பட்டிருந்த அனைத்து கண்ணிவெடிகளும் வெடிக்கச் செய்வதன் மூலம் அகற்றப்பட்டுள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன," என்று அவர் கூறியிருந்தார். மேலும், ஹார்முஸ் அமெரிக்க பிரதேசம் என்று குறிப்பிடும் வகையில் ஒரு பரைபடத்தையும் அவர் வெளியிட்டிருந்தார்.</span></p>
<p><span dir="auto">இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத் தான், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இத்தகை கருத்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக, வாஷிங்டனுக்கும் டெஹ்ரானுக்கும் இடையே, 60 நாள் பேச்சுவார்த்தைக் காலம் முடிவடைந்த பின்னரும், பேச்சுவார்த்தையை நீட்டிப்பதற்கான எந்த அறிகுறியையும் இரு தரப்பினரும் காட்டவில்லை. மாறாக, வார்த்தைப் போரே வெடித்துள்ளது. இது மேலும் விரிவடைந்து, மீண்டும் பெரிய ஆயுதப் பேராக மாறாமல் இருந்தால் நல்லது என்று உலக நாடுகள் கருதுகின்றன.</span></p>
<p> </p>
<p><span dir="auto"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/gk/do-you-know-why-railway-tracks-do-not-rust-271595" width="631" height="381" scrolling="no"></iframe></span></p>
Source: Read Full Article