
<p><strong>Anbumani On CM Vijay:</strong> ஒப்பந்தங்களாக மட்டுமில்லாமல் பண முதலீட்டையும் உறுதி செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.</p>
<h2><strong>முதலமைச்சர் விஜய்க்கு அன்புமணி கோரிக்கை:</strong></h2>
<p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் முதல் முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இதன் மூலம் ஆட்சியேற்ற 100 நாட்களிலேயே ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் இருந்து சென்னை திரும்பி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கடந்த திமுக அரசை போன்று தவெக அரசு இருந்துவிடக் கூடாது என வலியுறுத்தியதோடு, தமிழ்நாடு இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கான சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கையும் விடுத்தார்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/gk/you-cannot-do-these-things-on-the-train-at-night-details-in-pics-271008" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<h2><strong>”திமுகவை போன்று இருந்துவிடக்கூடாது” - அன்புமணி</strong></h2>
<p>இதுதொடர்பாக பேசிய அன்புமணி, “கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டு காலத்தில் 12 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கொண்டு வந்து இருக்கின்றோம் என சொன்னதை போன்று தவெக அரசு இருக்கக் கூடாது. புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது வேறு. உண்மையான முதலீடு என்பது வேறு. முதலீடுகள் உண்மையாக வரவேண்டும். கடந்த காலங்களில் நாம் பார்த்துவிட்டோம். திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடு 12 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் என்றார்கள். ஆனால் உண்மையான முதலீடாக சுமார் ஒன்றரை லட்சம் கோடி மட்டுமே வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், முதலீடு வந்தால் மகிழ்ச்சி. அதோடு, அதற்கேற்ப வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும். வேலையின்மை தான் மிகப்பெரிய பிரச்னை. தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்.</p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/r3G-TheCkBQ?si=KbrtCvSuXeSS_xti" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2><strong>சட்டம் இயற்ற CM விஜய்க்கு கோரிக்கை</strong></h2>
<p>தமிழ்நாடு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். மிகவும் முக்கியமாக தமிழ்நாட்டில் தனியார் தொழிற்சாலைகளில் 80 சதவிகித வேலைவாய்ப்பு உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என சட்டம் இயற்ற வேண்டும். இந்த சட்டம் ஏற்கனவே கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் குஜராத்தில் நடைமுறையில் உள்ளது. தங்களது தேர்தல் வாக்குறுதிகளிலும் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> இந்த வாக்குறுதியை கொடுத்துள்ளது. இதனை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அதனால் வேலைவாய்ப்பு உருவாகும்” என முதலமைச்சர் விஜய்க்கு அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p><a title="CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?" href="https://tamil.abplive.com/news/politics/cm-vijay-planning-to-appoint-anand-kumar-somani-ips-as-dvac-chief-know-who-he-is-tn-politics-271117" target="_self">இதையும் படியுங்கள்:CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?</a></p>
<h2><strong>காங்கிரஸ் மீது சாடல்</strong></h2>
<p>இதையடுத்து நியாயமான தொகுதி மறுவரையறை என்பதில் இருந்து தொகுதி மறுவரையறையே வேண்டாம் என காங்கிரசின் நிலைப்பாடு மாறி இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், “மூன்று மாதங்களுக்கு முன்பு வரை நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது. ஆனால், iப்போது தொகுதி மறுவரையறையே வேண்டாம் என சொல்கிறது. இடைபட்ட 3 மாதங்களில் காங்கிரசிற்கு என்ன ஆனது? என்ன பிரச்னை உங்களுக்கு, எல்லா மாநிலங்களுக்கும் 50 சதவிகித தொகுதிகள் அதிகரிக்கப்படும் என மத்திய அரசு கூறுகிறது. தென்மாநிலங்கள் பாதிக்கப்படும் என சிலர் குறிப்பிடுகின்றனர்.இதெல்லாம் வெறும் அரசியல் மட்டுமே. அமித் ஷா நாடாளுமன்றத்திலேயே உறுதி அளித்து இருக்கிறார். மக்கள் தொகை அடிப்படையில் இந்த மறுசீரமைப்பு இருக்காது எனவும், விகிதாச்சார அடிப்படையில் இருக்கும் எனவும் கூறியுள்ளார். இதை ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்னை என எனக்கு தெரியவில்லை” என அன்புமணி தெரிவித்துள்ளார்.</p>
Source: Read Full Article