
<p>தமிழ்நாட்டின் 2026-27ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது மானியக்கோரிக்கை மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடந்து வருகிறது.</p>
<p>இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீதான மானியக்கோரிக்கையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் வெளியிட்டார். அவற்றை கீழே காணலாம்.</p>
<h2><strong>1.13 மாவட்டங்களில் 15 சேமிப்பு கிடங்குகள்:</strong></h2>
<p>உணவு தானியங்களை சேமிப்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு 13 மாவட்டங்களில் மொத்தம் 31 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 15 சேமிப்பு கிடங்குகள் ரூபாய் 81 கோடியே 60 லட்சம் மதிப்பில் கட்டப்படும்.</p>
<h2><strong>2. நவீன சேமிப்பு கிடங்குகள்:</strong></h2>
<p>அரியலூர், நாமக்கல் மற்றும் மேட்டுப்பாளையம் சேமிப்பு கிடங்கு வளாகங்களில் தலா 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 3 நவீன சேமிப்பு கிடங்குகள் ரூபாய் 13 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்படும்.</p>
<h2><strong>3. தொழிலாளர் ஓய்வறை வசதி:</strong></h2>
<p>தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் 10 சேமிப்பு கிடங்கு வளாகங்களில் தொழிலாளர் ஓய்வறை வசதி ரூபாய் 1 கோடியே 89 லட்சம் மதிப்பில் ஏற்படுத்தப்படும்.</p>
<h2><strong>4. பராமரிப்பு பணி:</strong></h2>
<p>தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் 17 சேமிப்பு கிடங்கு வளாகங்களில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் ரூபாய் 12 கோடியே 61 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.</p>
<h2><strong>5. சிசிடிவி:</strong></h2>
<p>18 சேமிப்பு கிடங்கு வளாகங்களில் வைக்கப்படும் தானியங்களின் முழு நேர கண்காணிப்பை உறுதி செய்ய சிசிடிவி ரூபாய் 1 காேடியே 25 லட்சம் மதிப்பில் பொருத்தப்படும்.</p>
<h2>6. அட்டிக் கட்டைகள்:</h2>
<p>உணவு தானியங்களின் தரத்தை உறுதி செய்திட தரைவழி ஈரப்பதம் தாக்காமல் இருக்க தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் 12 சேமிப்பு கிடங்குகளுக்கு 6 ஆயிரம் அட்டிக் கட்டைகள் ரூபாய் 1 கோடியே 44 லட்சம் மதிப்பில் வழங்கப்படும்.</p>
<h2><strong>7. சிறந்த வளாகம் தரக்குறியீடு:</strong></h2>
<p>18 சேமிப்பு கிடங்கு வளாகங்கள் சிறந்த வளாகம் என்ற நட்சத்திர மதிப்பீட்டை அடைய அவற்றின் தரக்குறியீடு உயர்த்தப்படும்.</p>
<h2><strong>8. திறன் மேம்பாட்டு பயிற்சி:</strong></h2>
<p>தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் கிடங்கு பணியாளர்களுக்கு கிடங்குகளில் மேற்கொள்ளப்படும், நவீன தொழில்நுட்ப முன்னெடுப்புகள் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும். </p>
<h2>9. 5 ஆயிரம் மரக்கன்றுகள்:</h2>
<p>62 சேமிப்பு கிடங்கு வளாகங்களில் இயற்கை சூழலை பாதுகாக்கவும், பசுமை சூழலை உருவாக்கவும் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும்.</p>
<h2><strong>10. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உயர்வு:</strong></h2>
<p>250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நிரந்தர கட்டமைப்புடன் சேமிப்பு கிடங்கு, சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளுடன் கூடிய 100 நேரடி கொள்முதல் நிலையங்கள் ரூபாய் 81 கோடி மதிப்பில் கட்டப்படும். இதன்மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை 899 ஆக உயர்த்தப்படும்.</p>
<h2><strong>11. க்யூ ஆர் கோட் டேக்கிங் அறிமுகம்:</strong></h2>
<p>அரவை ஆலைகளில் இருந்து பெறப்படும் கண்டு முதல் அரிசியின் தரம், மூட்டைகளின் தடமறிதல் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு அரிசி மூட்டைக்கும் க்யூ ஆர் கோட் டேக்கிங் முறை அறிமுகப்படுத்தப்படும்.</p>
<h2><strong>12. லொகேஷன் ட்ராக்கிங்:</strong></h2>
<p>நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், சேமிப்பு மையங்கள் மற்றும் நியாய விலை கடைகள் வரை உணவு பொருட்களின் நகர்வினை புவியியல் தகவல் அமைப்பு முறையினை பயன்படுத்தி நேரடியாக கண்காணிக்கும் வகையில், வாகன வழித்தட மேலாண்மை திட்ட அமைப்பு ( லொகேஷன் ட்ராக்கிங் சிஸ்டம்) ரூபாய் 2 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.</p>
<p>இந்த அறிவிப்புகளை அமைச்சர் வெங்கட்ரமணன் வெளியிட்டுள்ளார். </p>
Source: Read Full Article