
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் உட்பட 3 பேரிடம் ஆன்லைன் வாயிலாக ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி செய்த மர்மநபர்களை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர்.</p>
<p style="text-align: justify;">தஞ்சாவூர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆர்.ரகுமான் (63) (பெயர்மாற்றப்பட்டுள்ளது). ஓய்வு பெற்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர். இவர் பழைய நாணயங்களை விற்பனை செய்யும் ஆன்லைன் தொழில் பற்றிய விளம்பரத்தை தனது பேஸ்புக்கில் பார்த்துள்ளார். தன்னிடம் இருந்த பழைய நாணயங்களை விற்க விருப்பப்பட்டு அந்த விளம்பரத்தில் இருந்த செல்போன் நம்பரை வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டார். எதிர்முனையில் பேசிய மர்மநபர் பழைய நாணயங்களை வாங்கிக் கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் ரகுமானிடம் இதற்காக கட்டணம் கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். </p>
<p style="text-align: justify;">அந்த மர்ம நபரின் வார்த்தைகளை உண்மை என்று நம்பிய ரகுமான் கடந்த 5.8.2026 முதல் 13 ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் ரூ.4,04,948/- பணத்தை மர்மநபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு, அந்த மர்மநபர் ரகுமானின் செல்போன் அழைப்புகளை தவிர்த்து விட்டார். பலமுறை தொடர்பு கொண்டும் பார்த்த ரகுமான் அதற்கு பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.</p>
<p style="text-align: justify;">இதுகுறித்து ரகுமான் தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிமதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ரகுமான் பணம் அனுப்பிய வங்கி கணக்குகள் பெங்களூர், ராஜஸ்தான், உத்தரபிரதேசத்தை சேர்ந்தவை என்று தெரிய வந்துள்ளது. </p>
<p style="text-align: justify;">இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த கே.சரஸ்வதி (பெயர் மாற்றம்) என்பவர் தனது மகனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப முடிவு செய்தார். இதையடுத்து கடந்த 3.10.2025ல் பேஸ்புக்கில் வந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு விளம்பரத்தைப் பார்த்துள்ளார். தொடர்ந்து விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வாட்ஸ்அப் எண் மூலம் தொடர்பு கொண்டார். அதில் பேசிய மர்மநபர் சரஸ்வதியிடம் உங்கள் மகனுக்கு வெளிநாட்டில் உறுதியாக வேலை வாங்கித் தருகிறேன் என்று தெரிவித்துள்ளார். <br />தொடர்ந்து இதற்கு கட்டணங்கள் செலுத்த வேண்டும் என்று சரஸ்வதியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சரஸ்வதி அந்த மர்மநபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு 5 ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் ரூ.2,50,000/- பணத்தை அனுப்பியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">பின்னர் சரஸ்வதி பலமுறை அந்த வாட்ஸ் அப் நம்பரில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அந்த மர்மநபர் செல்லை சுவிட்ஸ் ஆப் செய்துவிட்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சரஸ்வதி இதுகுறித்து தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். </p>
<p style="text-align: justify;">இதேபோல் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன பணியாளர் பி.சந்தியா (63) (பெயர் மாற்றம்) என்பவர் தனது வாட்ஸ்அப்ல் கடந்த 13.8.26 அன்று வந்த போலியான "RTO Challan" APK செயலியைப் பார்த்து அதிர்ச்சியடைந்து தனது வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக நினைத்து அந்த செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்துள்ளார். இதையடுத்து சந்தியாவின் செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில மணிநேரத்தில் சந்தியாவின் வங்கி கணக்கிலிருந்து 3 ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் ரூ.1,21,000/- பணத்தை மர்மநபர் ஜார்க்கண்டில் உள்ள வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார். </p>
<p style="text-align: justify;">தனது வங்கிக்கணக்கிலிருந்து தனது அனுமதியின்றி பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதை அறிந்த சந்தியா இதுகுறித்து தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. </p>
<p style="text-align: justify;">இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில் டிஜிட்டல் அரெஸ்ட், போலி செயலிகள், சமூக வலைதள மோசடிகள், ஆன்லைன் டிரேடிங்கில் டெபாசிட் செய்ய சொல்வது, வெளிநாட்டில் வேலை, ஒர்க் ப்ரம் ஹோம் வேலை வாய்ப்பு போன்ற குற்றங்களைத் தடுக்க, 1930 என்ற உதவி எண்ணுடனும், cybercrime.gov.in இணையதளத்துடனும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். </p>
<p style="text-align: justify;">முக்கியமாக, அறியாத அழைப்புகளை ஏற்காமல் இருப்பது, தனிப்பட்ட தகவல்களைப் பகிராமல் இருப்பது, போலி இணைப்புகளை (Links) கிளிக் செய்யாமல் இருக்க வேண்டும். மேலும் வங்கியிலிருந்து பேசுகிறோம் ஓடிபி வந்து இருக்கும் என்று வரும் அழைப்புகளை நம்பி ஏமாறக்கூடாது என்று தெரிவித்தனர்.</p>
Source: Read Full Article